Published : 25 Apr 2025 05:10 AM
Last Updated : 25 Apr 2025 05:10 AM

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோயில் சித்திரைத் திருவிழாவில் நாளை (ஏப். 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், நம் பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்டவை ஶ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள், தன்னை பெருமாளின் மனைவியாக நினைத்து மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூமாலையை சூடிக் கொண்டார். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மணம் புரிந்தார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம். அதைக் குறிக்கும் வகையில், ஆண்டாள் சந்நிதி உட்பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாளும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போது மலையப்ப சுவாமி, மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் நம் பெருமாள் ஆகியோர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம் அணிந்து எழுந்தருள்கின்றனர்.

அதன்படி, ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை உள்ளிட்டவை ஶ்ரீரங்கத்துக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டன.

சித்திரை மாத ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் நேற்று எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு வஸ்திரம், கிளி சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், மணியம் கோபி, சுதர்சன் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x