

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பிரம்மோற்சவம் என்ற பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது.
அதன்படி, திருவானைக்காவல் கோயிலில் பங்குனிப் பெருவிழா இன்று காலை, பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இன்று மாலை முதல் 13-ம் தேதி காலை வரை விநாயகர், சுப்ரமணியர் உற்சவம் நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி மாலை முதல் 16-ம் தேதி காலை தேவார மூவர் உற்சவம் (நால்வர் புறப்பாடு) நடைபெறுகிறது. 16-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை கல்யாண சுந்தரமூர்த்தி உற்சவம் நடைபெறுகிறது.
வரும் 19-ம் தேதி மாலை சந்திரசேகரர் பட்டம் கட்டி ஏக சிம்மாசனத்தில் ஆனந்தவல்லி எழுந்தருளி 4-ம் பிரகாரம் வலம் வந்து திக் பந்தனம் கண்டருளல் வைபவம் நடைபெறுகிறது. 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சந்திரசேகரர் உடனுறை ஆனந்தவல்லி அம்மன் 3-ம் பிரகாரம் வலம் வருகின்றனர். வரும் 25-ம் தேதி மதியம் 12 மணிக்கு, எட்டுத்திக்கு (எண்திசை) கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று மாலை ஏக சிம்மாசனத்தில் அம்மனும் சோமாஸ்கந்தரும் எழுந்தருளி 4-ம் பிரகாரம் வலம் வருகின்றனர். தினந்தோறும் பல்வேறு இடங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், ஸ்வாமியும் மண்டகப்படி கண்டருள்கின்றனர்.
அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தெருவடைச்சான் எனப்படும் சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம், வரும் 30-ம் தேதி காலை 7.09 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. விழாவின் நிறைவாக, சிவன், அம்மன் ஆகவும், அம்மன், சிவன் ஆகவும் வேடமிட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும், 'பஞ்சப் பிரகாரம்' மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது.
உலகத்திலேயே இந்தக் காட்சியானது இந்த திருக்கோயில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.