

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சுவாமிக்கு 1,00,008 வடைகளால் ஆன மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை நாளில் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக அனுமன் ஜெயந்தியன்று சுவாமிக்கு கட்டளைதாரர்கள் மூலம் 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்தாண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை முதல் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடை களால் ஆன மாலை அலங்காரம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு வடை மாலை அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, காலை 11 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், நாமக்கல் கோட்டை சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.