திருச்சானூர் பிரம்மோற்சவ தேர் திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருச்சானூர் பிரம்மோற்சவ தேர் திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
Updated on
1 min read

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, இரவு இரு வேளைகளிலும் தாயார் சின்ன சேஷம், பெரிய சேஷம், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில், 8 -ம் நாளான நேற்று காலை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இதில் முத்து கவசத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பலர் தேரின் மீது நேர்த்திக் கடனுக்காக மிளகு, உப்பு போன்றவற்றை தெளித்து வழிபட்டனர். இதில் ஜீயர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து, நேற்று இரவு குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்வேறு மாநில நடன கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், ஜீயர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று மதியம் 12 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் பஞ்சமி தீர்த்தவாரி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in