

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூ.1 கோடியே 65 லட்சம் கிடைத்துள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை துவங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் சிவராமகுமார் தலைமை வகித்தார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் இதர சுவாமிகள் சன்னிதியிலும், உப கோயில்களின் உண்டியல்களும் எண்ணப்பட்டன. இதில், ரூபாய் 1 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 645 (ரூ.1,65,77,645) ரொக்கம், 89 கிராம் தங்கம், 5 கிலோ 335 கிராம் வெள்ளி வரவாகி உள்ளதாக ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.