Last Updated : 10 May, 2018 10:23 AM

 

Published : 10 May 2018 10:23 AM
Last Updated : 10 May 2018 10:23 AM

துர்க்கை திரிபுரமாலினி

பி

ரம்மாண்டமும் எழிலும் கொண்ட குளத்தால் புகழ்பெற்ற ஆலயம் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள தேவிதலாப் மந்திர். காலத்தால் புராதனமான ஆலயமாக இருப்பினும், 200 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்போதுள்ள தோற்றத்தில் விரிவாக்கப்பட்டது.

தேவிதலாப் மந்திரின் நுழைவாயிலில் இரண்டு பெரிய கதவுகள் உள்ளன. வாசல் வழியைக் கடந்து சென்றால் புனிதக்குளம் தென்படும். இந்தக் குளத்தின் இடதுகரையில் திரிபுரமாலினி தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களின் ஒன்றான இந்த ஸ்தலத்தில் தேவியின் மார்புப்பகுதி விழுந்ததாக நம்பிக்கை உள்ளது.

சக்தியின் வடிவமான துர்க்கை, திரிபுரமாலினியாக எழுந்தருளியுள்ளார். இந்தச் சன்னிதிக்குள் சென்றால் துர்க்கையைக் கண்குளிரத் தரிசிக்கலாம். தினம் ஒரு புடவை சாத்தப்பட்டு ஜொலிக்கும் நகைகளுடன் அலங்காரப் பூஷிதையாகத் திரிபுரமாலினி காட்சி தருகிறார். அம்மனுக்குப் பூக்கள் குவிகின்றன.

துர்க்கை இருக்கும் இடத்தில் பைரவர் இல்லாமல் இருப்பாரா? இங்கு பைரவர் பிஷான பைரவராகத் தனிச் சன்னிதி கொண்டிருக்கிறார். காளிக்கும் தனிச் சன்னிதி உண்டு. குளத்தின் மையம் வழியே சென்றால் பகவதி மந்திரை அடையலாம். இங்கே மாதுர்கா, மாலட்சமி, மாசரஸ்வதியைத் தரிசிக்கலாம். இதைத் தங்கக் கோயில் என்றும் அழைக்கின்றனர். கோயிலுக்குள் ஸ்ரீராம் தர்பார், பெரிய ஆஞ்சனேயருடன் நடக்கிறது. அமர்நாத் தரிசனப் பாதையை தத்ரூபமாக மாடல் காட்சியாக்கி உள்ளனர். வைஷ்ணவ தேவியின் இயற்கையான அமைப்பும் இங்கே தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கோயிலின் உள்ளே கிருஷ்ணர், கவுரிஷங்கர், மகாகாயத்ரி ரூபங்களும் உள்ளன. இரவில் வண்ண வண்ண விளக்குகளுடன் சொர்க்கலோகம் போல ஜொலிக்கும் ஆலயம் இது. பஞ்சாபி மக்களின் குலதெய்வமாகக் கருதப்படுபவள் திரிபுரமாலினி. அதனால் அந்த ஆலயத்தை தங்கத்தாலேயே இழைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x