கோவில்பட்டி அருகே புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் 

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா இன்று (ஆக.7) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீரமாமுனிவர் பங்கு குருவாகப் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது. தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து கிறித்துவ மக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகளும் அணிவகுத்துக் கட்டப்பட்டன. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அர்ஜித், பெருவிழா கொடியை ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து, அருட்பணியாளர்கள் ஆல்பர்ட், அருள் அந்தோணி, அந்தோணி வியாகப்பன் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல் சமபந்தி விருந்து நடந்தது. கொடியேற்று விழாவையொட்டி, வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

திருவிழாவின் 5-ம் திருநாளான ஆக.10-ம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 6-ம் திருநாளான ஆக.11-ம் தேதி காலை 8.30 மணிக்கு புது நன்மை விழா, 9-ம் திருநாளான ஆக.14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. 10-ம் திருநாளான ஆக.15-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது.ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தையுமான அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜே.அந்தோனி ராஜ், ஆன்மிக தந்தை வி. எஸ். அந்தோனி ராஜ், களப்பணியாளர் சகோதரர் ஜேக்கப் பவுல், மரியின் ஊழியர் சபை அருள் சகோதரிகள், புனித தெரசாவின் கார்மேல் சபை அருள் சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி கிறிஸ்தவ மக்கள் செய்து வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு: காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in