Published : 07 May 2024 05:50 AM
Last Updated : 07 May 2024 05:50 AM

‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள். (உள்படம்) தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ‘விருப்பன் திருநாள்’ எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அந்தவகையில், நிகழாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா ஏப்.28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை சேர்ந்தார். பின்னர், தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்புபூஜைகளுக்குப் பின், காலை 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்ட தேர், தெற்கு,மேற்கு, வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9.30 மணிக்கு நிலையை அடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் தேருக்கு முன்பாக தேங்காய் உடைத்தும், நெய்விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

தேரோட்டத்தையொட்டி தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இன்று கொடியிறக்கம்: திருவிழாவின் 10-ம் திருநாளானஇன்று சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்துஇரவு கொடியிறக்கம் நடைபெறும்.11-ம் திருநாளான நாளை (மே 8) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x