Last Updated : 06 May, 2024 04:14 AM

 

Published : 06 May 2024 04:14 AM
Last Updated : 06 May 2024 04:14 AM

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா 5 நாட்கள் நடத்தப்படுமா?

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவை, ஏற்கெனவே நடத்தப்பட்டது போல 5 நாள் நிகழ்வுகளாக நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில், கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சார்பில், காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. 4 நாட்கள் நடத்தப்பட்டு வந்த இவ்விழா நிகழ்வுகள், கடந்த 2019-ம்ஆண்டு 5 நாட்களாக நீட்டித்து நடத்தப்பட்டது. அதன்பின், கரோனா பரவல் சூழலால் 2020, 2021-ம்ஆண்டுகளில் பெருமளவில் பக்தர்கள் பங்கேற்பின்றி 5 நாள் நிகழ்வுகளாகவே நடத்தப்பட்டன.

பின்னர் 2022, 2023 ஆண்டுகளில் பழையபடி 4 நாட்கள் நடத்தப்பட்டன. இந்த நாட்களில் இரவு, பகலாகபல்வேறு வைபவங்கள் நடைபெறுவதால், அவற்றை முழுவதையும் பக்தர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்படுவதுடன், சிவாச்சாரியார்கள், அலுவலர்கள், சேவார்த்திகள் உள்ளிட்டோரும் மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது.

இதில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வழிபாடு செய்யும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மிகவும் தாமதமாக தொடங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், வீதியுலாவை விரைவாக முடிக்க முயற்சிப்பதால், பலரால் தரிசிக்க முடியாமலும், படையல் செய்ய முடியாமலும் போவதாக பக்தர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

எனவே, விழாவை 5 நாட்கள் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நிகழாண்டும் 4 நாள் விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 19-ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு, 20- ம் தேதி காலை திருக்கல்யாணம், மாலையில் வெள்ளைசாற்றி புறப்பாடு, 21-ம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா, மாலையில் அமுது படையல், 22-ம் தேதி அம்மையார் இறைவனுக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற உள்ளன.

இது குறித்து கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய முன்னாள் செயலாளர் எம்.பக்கிரி சாமி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு தாமதமாக தொடங்குவதால், மாலை வீதியுலா முடிவின் போது அவசரப்படுத்தப்படுகிறது. அதன்பின் அமுது படையல் நிகழ்வு நடைபெற இரவு 10 மணியாகி விடுகிறது. இது சரியான முறைஅல்ல. அம்மையார் இறைவனுக்கு அமுது படைத்தது நண்பகல் நேரத்தில்தான். அதனால் மாலை 6 மணிக்குள்ளாவது அமுது படையலை நிகழ்த்தி விட வேண்டும்.

மேலும், பக்தர்கள் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரிப்பதால், வீதியுலாவின் நேரத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. இவற்றை யெல்லாம் உணர்ந்து, ஆகம விதிகளையும் கேட்டறிந்து, அரசின் ஒப்புதல் பெற்றுதான் 5 நாள் நிகழ்வுகளாக நீட்டிக்கப்பட்டது. எனவே, விழாவை 5 நாட்கள் நடத்த கோயில் நிர்வாகமும், அரசும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பக்தர்கள் பலரும் இதே கருத்தையே வலியுறுத்து கின்றனர். பிச்சாண்டவர் வீதியுலாவை விரைவாக முடிக்க முயற்சிப்பதால், பலரால் தரிசிக்க முடியாமலும், படையல் செய்ய முடியாமலும் போவதாக பக்தர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x