மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி. படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன்கோயில் சித்திரைத் திருவிழாவைமுன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி, நேற்று சுவாமிசந்நிதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்திலுள்ள தங்கக் கொடிமரம்மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வேதமந்திரங்கள் முழங்ககாலை 9.30 முதல் 10.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது, அங்கு பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரர்,மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா, அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மேயர் இந்திராணி, அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், செல்லையா, மீனா, சுப்புலெட்சுமி, இந்துசமய அறநிலையத் துறைஇணை ஆணையர் க.செல்லத்துரை, கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் பங்கேற்றனர்.

இதையடுத்து, நேற்றிரவு கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தினமும் காலை, மாலையில் சுவாமி - அம்மன் புறப்பாடு நடைபெறும். ஏப்.17-ல் சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, ஏப்.19-ம்தேதி இரவு 7.35 முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ஏப்.20-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்கு விஜயம் நடைபெறுகிறது.

முக்கிய விழாவானமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.21-ம் தேதி காலை 8 முதல் 9 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறுகிறது. ஏப்.22-ம் தேதி காலை 7 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.23-ல் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்.22-ல் கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்.23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in