

நாகப்பட்டினம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
முஸ்லிம்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் முஸ்லிம்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது கடைபிடிக்கப்படுகிறது.
ஒருவருக்கொருவர் வாழ்த்து: அதன்படி, நடப்பாண்டில் முஸ்லிம்கள் மார்ச் 12-ம் தேதி முதல் நோன்பு கடைபிடித்த நிலையில், நேற்று நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நாகூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள 56 பள்ளிவாசல்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.