

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ அறம்வளத்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 52 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பழமை வாய்ந்த அறம் வளத்தீஸ்வர் கோயில் உள்ளது.
இந்தக் கோயில் 52 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டது. கோயிலுக்கு புதிதாக ராஜகோபுரமும் நிர்மாணிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த 25-ம் தேதி தொடங்கின.
இதன் தொடர்ச்சியாக யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று யாக சாலைபூஜைகள் நிறைவு பெற்று சிவச்சாரியார்களால் புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும், பரிவாரதெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
இந்த குடமுழுக்கு விழாவையொட்டி அறம் வளத்தீஸ்வரர் கோயில் தெரு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோயில்திருப்பணிக் குழுவின் தலைவர்ஏ.முத்துச்சாமி, பொருளாளர் ஆர்.பெருமாள் மற்றும் குழு உறுப்பினர்கள், அறம் வளத்தீஸ்வரர் கோயில் தெருவாசிகள்,செங்குந்த மரபினர் சமூகத்தினர் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் அறநிலையத் துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர். மாலை ஆலயத்தில் திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன. விஷ்ணு காஞ்சி போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.