Last Updated : 31 Jan, 2018 10:48 AM

 

Published : 31 Jan 2018 10:48 AM
Last Updated : 31 Jan 2018 10:48 AM

சந்திரகிரகணத்தையொட்டி கோயில்களில் மதியத்துக்கு மேல் நடை அடைப்பு

தைப்பூசத் திருநாளும் பெளர்ணமியான இன்றைய தினம் 31ம் தேதி புதன்கிழமை, சந்திர கிரகணம் நிகழ்வதால், அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்கள் முதலான பெரும்பான்மையான ஆலயங்களில், மதியத்துக்கு மேல் நடை சார்த்தப்படுகிறது. மேலும் கிரகணம் முடிந்ததும் கோயில்களில் நடை திறக்கப்பட்டு, பிராயச்சித்த பூஜை நடைபெறும்.

இன்று 31.1.18 தைப்பூச நன்னாள். பெளர்ணமியும் கூட. இந்த வேளையில், இன்னொரு விஷயமும் நடைபெறுகிறது. இந்த நாளில்தான் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதாவது, இன்று புதன் கிழமை, மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரை சந்திர கிரகணம் பிடிக்கிறது. எனவே இந்த சமயத்தில் வெளியில் வருவதைத் தவிர்ப்பது தேக ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

சந்திரனை மனோகாரகன் என்பார்கள். அதாவது, நம் மனதை ஆட்டிவைப்பவன் சந்திர பகவான். நாம் நல்லது நினைத்தாலும் தீய சிந்தனைகளுடன் இருந்தாலும் அதற்குக் காரணம் சந்திரனே என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதனால்தான் சந்திரனை, மனோகாரகன், மனதுக்கு அதிபதி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சந்திர கிரகண வேளையில், அதன் ஆதிக்கம் இன்னும் விஸ்தரித்திருக்கும். இன்னும் இன்னுமாக வியாபித்திருக்கும். அந்த வேளையில், சந்திரனின் ஒளியானது நம் மீது படாமல் இருப்பதும் நாம் சந்திரனைப் பார்க்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம் என்கிறார்கள்.

மேலும் சந்திர கிரகண வேளையில், அதாவது மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரைக்கும் கோயில்களில் பூஜைகள், வழிபாடுகள் எதுவும் நடைபெறாது. தமிழகத்தின் அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் ஏனைய கோயில்களிலும் மதியம் உச்சிகால பூஜைக்குப் பிறகு நடை சாத்தப்படும். சாயரட்ஷை பூஜை இன்று நடைபெறாது.

கிரகண நேரமான மாலை 622 முதல் இரவு 8.42 மணி வரை நடை திறக்கப்படாது. கிரகணம் முடிந்ததும் கோயில் நடை திறக்கப்பட்டு, கிரகணப் பிராயச்சித்த பூஜையும் அர்த்தஜாம பூஜையும் நடைபெறும். இதையடுத்து வழக்கம் போல் கோயில் நடை சார்த்தப்படும் என்று பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலின் செயல் அலுவலர் கோவிந்தராஜூ தெரிவித்தார்.

கிரகணம் முடிந்ததும், குளித்துவிட்டு, அருகில் உள்ள கோயில்களில் நடைபெறும் பிராயச்சித்த பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது, கிரகண தோஷம் பீடிக்காமல் இருக்கும். மேலும் இந்த கிரகணத்தால் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

ஆறுபடவீடுகளில் ஒன்றான பழநியில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி, தைப்பூச தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மாலை 3.45 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இதையடுத்து திருக்காப்பிடப்படுகிறது. எனவே மதியத்துக்கு மேல் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரகணம் முடிந்ததும் இரவு 9 மணிக்கு நடை திறக்கப்படும். சம்ப்ரோக்ஷண பூஜையைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பிறகு பூஜை மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு நடை சார்த்தப்பட்டு மறுநாள் அதிகாலையில் வழக்கம் போல் நடை திறக்கப்படும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x