Last Updated : 17 Jan, 2018 05:20 PM

 

Published : 17 Jan 2018 05:20 PM
Last Updated : 17 Jan 2018 05:20 PM

வெற்றிவேல் முருகனுக்கு... 2: ஆறுபடையப்பன்!

ஆறுமுகனுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு என்பதெல்லாம் நமக்குத் தெரியும்தான். அங்கே... ஒவ்வொரு நன்மைகளைத் தந்தருள்கிறார் முருகப் பெருமான்.

வெற்றியைத் தந்தருளும் வேலவனின் திருத்தலங்களையும் அங்கே நமக்குத் தரும் நன்மைகளையும் பார்ப்போம்.

திருப்பரங்குன்றம்

மதுரைக்கு அருகில் உள்ளது திருப்பரங்குன்றம். மலையையொட்டி ஊருக்குள் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குச் செல்வதற்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. இங்கே முருகன் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார்.

இந்தத் தலத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அருகில் உள்ள திருக்குளம் விஸ்தாரமாக, அழகுற அமைந்துள்ளது. இதில் நீராடி முருகப் பெருமானைத் தரிசித்தால், வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் நீங்கிவிடும் என்கிறார்கள்.

அதேபோல், திருமணத் தடையால் கலங்கித் தவிக்கும் அன்பர்கள், செவ்வாய்க்கிழமை நாளில், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண மாலையைத் தந்தருள்வார் கந்தக் கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

இங்கே இன்னொரு சிறப்பு. இங்கு வேலுக்கு அபிஷேகம் செய்வது, கண்கொள்ளாக் காட்சி. வேலுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நம் பிரார்த்தனைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்தருள்வான் வேலப்பன் என்று கொண்டாடுகிறார்கள்.

திருச்செந்தூர்

அந்தக் காலத்தில் திருநெல்வேலி ஜில்லாவுக்குள் இருந்த கோயில், திருச்செந்தூர். இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து நிறைய பஸ்கள் இயங்குகின்றன.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், கடலோரத்தில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம். முருகப்பெருமான் இங்கே ஞானகுருவாக இருந்தும் அருள்பாலிக்கிறார். வருடந்தோறும் இங்கே நடைபெறும் சூரசம்ஹார வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் திருச்செந்தூரிலும் எப்போதும் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த வந்துகொண்டே இருக்கும் விசேஷமான திருத்தலம் இது என்று போற்றிக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.

இங்கே கடலில் நீராடிவிட்டு, செந்திலாண்டவரை வேண்டிக் கொண்டால், தீராத வியாதியும் தீரும். எதிர்ப்பும் பகையும் அகலும். காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வான் வேலவன். அதேபோல், குழந்தைகள் இந்தத் தலத்தில் காலடி வைத்தாலே, அவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

பழநி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது பழநிமலை. இங்கே மலையின் மேலே நின்ற திருக்கோலத்தில் இருந்தபடி, நம் மனங்களில் நின்று ராஜபரிபாலனம் செய்துகொண்டிருக்கிறார் பழநி தண்டாயுதபாணி.

இந்தத் தலத்தின் விசேஷம்... தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் கேரளாவின் பாலக்காட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து முருகனைத் தரிசிக்கும் ஆலயம். எனவே எப்போதும் கூட்டத்துக்குக் குறைவே இல்லை இங்கே!

அதுமட்டுமா?

செட்டிநாடு என்று சொல்லப்படும் காரைக்குடியில் இருந்து சுமார் 150 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானைத் தரிசிக்க, நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டிமார்கள், பாதயாத்திரையாக வந்து முருகக் கடவுளைத் தரிசித்தார்கள். அன்று தொடங்கிய பாதயாத்திரை, இன்றைக்கு காரைக்குடி, பரமக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, பார்த்திபனூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், அருப்புகோட்டை, விருதுநகர், மதுரை, மானாமதுரை என பல ஊர்களில் இருந்தும் பாதயாத்திரையாக வருகிறார்கள் பக்தர்கள்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், மணப்பாறை, பட்டுகோட்டை, பேராவூரணி என அந்தப் பக்கமிருந்தும் பாதயாத்திரைக் குழுவினர் வருகிறார்கள். தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை யாக வருகிறார்கள் .

நகரத்தார் மட்டுமின்றி அனைத்து சமூகத்தினரும் வருகிறார்கள், இப்போது. மேலும் அந்த சமயத்தில், காவடி எடுத்து வரும் பக்தர்களும் ஏராளம். பழநி தண்டாயுதபாணியை வேண்டிக் கொண்டால், புத்தியில் தெளிவும் மனதில் குழப்பமில்லாத நிலையும் உண்டாகும் என்பது உறுதி!

மேலும் கடன் தொல்லையால் அவதிப்படுவோர், முருகனுக்கு முடி காணிக்கை செலுத்திப் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்கவும் அருள்கிறார் தண்டாயுதபாணி.

சுவாமிமலை

சோழ தேசத்தில், அதாவது கோயில்நகரம் என்று கொண்டாடப்படும் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள அற்புதமான திருத்தலம், சுவாமிமலை. சொல்லப்போனால், கோயில்களுக்குப் பெயர் பெற்ற சோழ தேசத்தில் , ஆறுபடைவீடுகளில் ஒரேயொரு படை வீடு, அது சுவாமிமலை திருத்தலம் மட்டுமே இங்கே உள்ளது.

இன்னொரு அதிசயம்... மலையே இல்லாத இடத்தில், மலையை உருவாக்கி, அதில் எழுப்பப்பட்ட ஆலயம் இது. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா என்று இங்கே உள்ள முருகனைப் புகழ்கிறார்கள். அதனால்தான் இவருக்கு சுவாமிநாதன் என்றே திருநாமம் அமைந்தது.

இங்கு, அறுபது படிகள் உள்ளன. அறுபது படிகளைக் கடந்துதான் ஆறுமுகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். அதென்ன அறுபது படிகள். தமிழில் உள்ள அறுபது வருடங்களை, அறுபது படிகள் குறிக்கின்றன.

இங்கே வந்து, சுவாமிநாத சுவாமியை மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் யாவற்றையும் ஜெயம் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பது ஐதீகம். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். செல்வத்துடன் சுபிட்சமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்! அதைவிட முக்கியமான ஒன்று... தந்தைக்கு உபதேசம் செய்த திருத்தலம் அல்லவா. எனவே ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்வார் முருகப் பெருமான் என்று போற்றுகின்றனர்.

திருத்தணி

சென்னைக்கு அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒரு வீடு, திருத்தணி திருத்தலம். மலையின் மீது காட்சி கொடுத்து, மலையளவு பக்தர்களைக் கொண்டிருக்கிறார் தணிகைவேலன். பெண்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.

அதேபோல், கல்யாணத் தடையால் வருந்துபவர்கள், இங்கு வந்து முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவிலே தடைகள் தகர்ந்துவிடும். கல்யாண மாலை தோள் சேரும் என்று பூரிப்புடன் சொல்கிறார்கள், பலன் பெற்றவர்கள்!

வழக்கு முதலான சிக்கல்களில் இருப்பவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். சீக்கிரமே வழக்கில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும் என்பது உறுதி என்பது ஐதீகம்!

கோபத்தையும் பழி வாங்குகிற குணத்தையும் நம்மில் இருந்து அகற்றி, அமைதியையும் மகிழ்ச்சியையும் தந்தருள்வார் தணிகைவேலன். நம் மனத்தை தணித்துக் குளிரச் செய்வான், குன்றுதோறும் உள்ள திருத்தணி மலை வாழ் குமரப்பன்!

பழமுதிர்ச்சோலை

மதுரையில் திருப்பரங்குன்றம் அந்தப் பக்கம் என்றால் பழமுதிர்ச்சோலை இந்தப்பக்கம். மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. அழகர்கோவிலா என்று குழம்புகிறீர்கள்தானே.

ஆமாம். வைகையாற்றில் இறங்குவாரே அழகர். அந்தக் கள்ளழகர் குடிகொண்டிருக்கும் கோயில் கீழே அடிவாரத்தில் உள்ளது. மலையின் மேலே வழக்கம் போல் மால்மருகன் காட்சி கொண்டிருக்கும் ஆலயம் அமைந்துள்ளது.

பழமுதிர்ச்சோலை, ஆறுபடைவீடுகளில் ஒன்று. உண்மையிலேயே பழமுதிர்ச்சோலைதான்/ அந்தப் பகுதியும் சூழலும் அப்படியொரு ரம்மியத்தைத் தரவல்லது. சிறிய கோயில்தான். ஆனாலும் கீர்த்தி மிக்கவர் முருகப்பெருமான் என்று கொண்டாடுகிறார்கள்.

இங்கே சுனை தீர்த்தம் பிரசித்தம். இந்தச் சுனையில் நீராடினால் புண்ணியம் பெருகும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். மேலும் சுனை தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டாலே, கிரக தோஷங்கள் யாவும் விலகிவிடும். தீராத நோயும் தீர்ந்து, ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

உங்களுக்கு ஒன்று... ஆறுபடை நாயகன் குடிகொண்டு அருள்பாலிக்கிற, ஆட்சி செலுத்துகிற ஆறுபடை வீடுகளுக்கும் சென்றிருக்கிறீர்களா. தரிசித்திருக்கிறீர்களா. இல்லையென்றால்... இந்த வருடத்தின் திட்டமாக ஆறுபடை வீடு தரிசனம் என்பதை உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிம்மதியும் சந்தோஷமுமாக, நிறைவுடனும் ஆனந்தமுமாக வாழச் செய்வான் வடிவேலன் என்பது உறுதி!

-வேல்வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x