Last Updated : 06 Feb, 2018 09:49 AM

 

Published : 06 Feb 2018 09:49 AM
Last Updated : 06 Feb 2018 09:49 AM

சங்கடங்கள் காணாமல் போகும்! சஷ்டியில் சக்திவேலை வணங்குவோம்!

அழகன் முருகனை எப்போது தரிசித்தாலும் மனதையே இளகச் செய்வான். லேசாக்கிவிடுவான் வெற்றிக் குமரன். அந்த கந்தகுமாரனை, சஷ்டியில் வணங்குவோம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வான் வேலவன்.

மாதந்தோறும் வருகிற சஷ்டி முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். இந்த நாளில் விரதமிருந்து, வேலவனை வழிபட்டால், வினைகள் யாவையும் தீர்ப்பான். கவலைகள் அனைத்தையும் துரத்தி அருள்வான் என்கின்றனர் பக்தர்கள்.

ஆகவே, சஷ்டியில் விரதம் இருந்து வள்ளிமணாளனை வணங்குவது சிறப்பு. விசேஷம். பலன்களையும் பலத்தையும் தரவல்லது.

அதேபோல், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு வழிபாடு செய்வது, தோஷங்கள் அனைத்தையும் போக்கும். துக்கங்கள் அனைத்தையும் நீக்கும். செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, முருகனுக்கு உகந்த செந்நிற மலர்களைச் சூட்டி, மனதாரப் பிரார்த்தனை செய்தால், நம் சங்கடங்களைத் தீர்ப்பான். வீடு மனை முதலானவற்றில் உள்ள சிக்கல்களையெல்லாம் தீர்த்தருள்வான்.

குடும்பத்தில் மகிழ்ச்சியை குடியேறச் செய்து, நம்மையும் நம் சந்ததியினரையும் நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழச் செய்வான், வடிவேலன் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, கந்தனை வேண்டுங்கள். முடிந்தால் எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, நான்குபேருக்கேனும் வழங்குங்கள். காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வான் கந்தகுமாரன்! கஷ்டத்தையெல்லாம் போக்கி, வாழ்வில் வசந்தத்தைத் தந்தருள்வான் வள்ளிமணாளன்!

இன்றைய சஷ்டி நாளில், தை செவ்வாய்க்கிழமையில், அதிபதியான மயிலோன் முருகனைத் தரிசியுங்கள். மங்கல காரியங்கள் தடையின்றி நடத்தி, மனதுக்கு இனிய வாழ்க்கையைத் தந்தருள்வான் சிவ குமாரன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x