கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்: இலங்கை பக்தர்கள் 4,000 பேர் பங்கேற்பு

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயம்.
கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயம்.
Updated on
1 min read

ராமேசுவரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று தொடங்குகிறது. இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் 4,000 பேர் இதில் பங்கேற்கின்றனர். இந்திய மீனவர்கள் விழாவைப் புறக்கணித்துள்ளனர்.

ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக் நீரிணை கடற்பரப்பில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள அந்தோணியார் ஆலயத்தில் இன்றும் (பிப். 23), நாளையும் திருவிழா நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க வருமாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர்அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், ராமேசுவரம் வேர்க்கோடுபங்குத்தந்தை சந்தியாகுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று 75 விசைப்படகுகள், 28 நாட்டுப் படகுகளில் 3,455 பேர் கச்சத்தீவு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

திருவிழா புறக்கணிப்பு: இந்நிலையில், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்குஇலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதை ரத்து செய்து, மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், கச்சத்தீவுதிருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். இதனால், கச்சத்தீவுக்கு செல்லும் பயணத் திட்டத்தை ரத்து செய்வதாக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்தார்.

இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று (பிப். 23) மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம் தொடங்கிவைக்கிறார்.

தொடர்ந்து ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (பிப். 24) காலை 7.30 மணியளவில் சிறப்புதிருப்பலி, கூட்டுப் பிரார்த்தனையையாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர்அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நடத்தி வைக்கிறார். பின்னர் கொடி இறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

இந்த திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 4,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in