Last Updated : 26 Jan, 2018 11:59 AM

 

Published : 26 Jan 2018 11:59 AM
Last Updated : 26 Jan 2018 11:59 AM

வெற்றிவேல் முருகனுக்கு... 13: வழிவிடுவான் வேல் முருகன்!

ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு முருகன் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், ரவுண்டானா பகுதியில் ரயில்நிலையத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கிறது வழிவிடு முருகன் கோயில்.

மிகச் சிறிய கோயில்தான். ஆனாலும் கீர்த்தியில் உயர்ந்திருக்கிறது இந்தத் திருத்தலம். ஊருக்குக் கிளம்பிச் செல்பவர்களும் சரி... ஊருக்குள் வந்து இறங்குபவர்களும் சரி... சந்நிதியில் நின்று வழிவிடும் முருகனிடம் வேண்டிக் கொண்டுதான் செல்கின்றனர்.

அழகே உருவெனக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறான் வடிவேலன். செவ்வாய்க்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்தக் கடைக்காரர்களில் பெரும்பாலோனோர், தினமும் வழிவிடும் முருகனைத் தரிசித்து வணங்கிவிட்டுத்தான், கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள்.

‘அப்பா முருகா... இன்னிக்கி பொழுது நல்ல பொழுதா அமையணும். நல்லபடியா வியாபாரம் ஆகணும்’ என்று வேண்டிக்கொள்கின்றனர். அப்படியான வேண்டுதலை நிறைவேற்றி அருள்வதால், ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை முதலான நாட்களில், இங்கே உள்ள வியாபாரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் சேர்ந்தும் என அன்னதானம் வழங்குகின்றனர்.

அதேபோல், ஜங்ஷன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள், புதிதாக இரு சக்கர வாகனமோ கார் முதலான நான்கு சக்கர வாகனமோ வாங்கினால், வாங்கிய கையுடன் வழிவிடும் முருகன் கோயில் வாசலில் வந்து நிறுத்துகின்றனர். வண்டிச் சாவியை முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். வண்டிக்கு சந்தனம் குங்குமமிட்டு, மாலை அணிவித்து, சூடமேற்றி பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகே வண்டியை எடுத்துச் செல்கின்றனர்.

இப்படிச் செய்வதால், வாகன விபத்து ஏதும் நேராமல் வழிவிடும் முருகன் காத்தருள்வான். செல்லும் வழியெங்கும் துணைக்கு வருவான் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்!

அதேபோல், ரயில் எஞ்சின் டிரைவர்கள் தொடங்கி பேருந்து ஓட்டுனர்கள் வரை பலரும் வழிவிடும் முருகனை மனதார வேண்டிக் கொள்கின்றனர். அதேபோல், தினமும் இரவில் பேருந்தை ஷெட்டில் நிறுத்துவதற்கு முன்னதாக, இங்கு வந்து கோயில் நடையே சார்த்தியிருந்தாலும் கூட, வாசலில் சூடமேற்றி, வணங்கிவிட்டு, அன்றைய பணியை நிறைவு செய்கின்றனர்.

எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் வழிவிடும் முருகன் சந்நிதியில் வந்து, இரண்டு நிமிடம் கண்மூடி வேண்டிக் கொண்டால் போதும். நம் வேதனைகளையெல்லாம் போக்கி அருள்வான் வழிவிடும் முருகன் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

வேலைக்கு இண்டர்வியூ செல்லும் இளைஞர்களும் மருத்துவமனைக்குச் செல்பவர்களும் இங்கே வந்து, முருகப்பெருமானை தரிசித்து, சிதறுகாய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர். அப்படி வழிபட்டால், நல்ல வேலை கிடைக்கப் பெறலாம். தீராத நோயும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்!

திருச்சிக்குச் செல்லும் அன்பர்கள், எத்தனையோ முறை இறங்கி ஏறிச் சென்றிருப்பீர்கள். ஒருமுறையேனும் திருச்சி ரயில்நிலையத்துக்கு எதிரில் உள்ள வழிவிடும் முருகனை கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நல்ல வழி காட்டி அருளக் காத்திருக்கிறான் வழிவிடும் முருகன் என்கின்றனர் முருக பக்தர்கள்!

இன்னொரு விஷயம்... பழநிக்குப் பாதயாத்திரை செல்லும் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், வழிவிடும் முருகன் கோயிலுக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, சிதறுகாய் உடைத்துவிட்டுத்தான், பழநி பாதயாத்திரையைத் தொடங்குகிறார்கள்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாளில், சஷ்டி திதி நாளில் வழிவிடும் முருகனை தரிசித்து வேண்டுங்கள். வாழ்க்கைக்கு வழிகாட்டுவான். வாழ்க்கையையே வளம் பெறச் செய்வான், வடிவேலன் என்பது உறுதி!

-வேல்வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x