Published : 07 Feb 2024 05:21 AM
Last Updated : 07 Feb 2024 05:21 AM

திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ராப்பத்து திருநாளின் முதல்நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலாக விளங்கும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், வைணவ திவ்யதேசத் தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமையுடனும் திகழ்கிறது.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிப்.1-ம் தேதி தொடங்கியது. பிப்.5-ம் தேதி வரை பகல்பத்து நடைபெற்றது. இந்த நாட்களில் தாயார் மூலஸ்தானத்தில் திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்பட்டன.

தொடர்ந்து ராப்பத்து திருநாள் நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்கள், ஆச்சார்யர் மரியாதையாகி திருவாய்மொழி மண்டபத்தை தாயார் அடைந்தார்.

அங்கு திருவாய்மொழி கோஷ்டி, அலங்காரம், அமுது செய்தல், திருப்பாவாடை கோஷ்டி,தீர்த்தக் கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேர்ந்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தாயாரை தரிசித்தனர்.

பிப்.11-ம் தேதி விழா நிறைவு: இதேபோல, நாளை வரை தாயார் புறப்பாடாகி, சொர்க்கவாசல் வழியாக திருவாய்மொழி மண்டபத்தை சென்றடைவார். வரும் 11-ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையிலான கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர். இத்தலத்தில் மட்டுமே தாயார் சொர்க்கவாசலைக் கடக்கும் நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x