சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜன.15-ல் மகரஜோதியைக் காண குவிந்த பக்தர்கள்

சபரிமலையில் மகரஜோதியை காண குவிந்த பக்தர்கள். 
சபரிமலையில் மகரஜோதியை காண குவிந்த பக்தர்கள். 
Updated on
1 min read

குமுளி: சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோதி வடிவில் ஐயப்பசுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளானோர் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பசுவாமியை தரிசிக்க செல்வர். சபரிமலையில் முக்கிய நிகழ்வாக மகரஜோதி தை மாதம் முதல் தேதி(ஜன.15) நடைபெறும். மகரஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவில் ஐயப்பசுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மகரஜோதியை காண கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

ஜனவரி 15-ம் தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்ரம பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நெய்அபிஷேகம் மற்றும் வழங்கமான பூஜைகள் நடைபெறும். பகல் 12.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜையை தொடர்ந்து பகல் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மாலையில் ஐயப்பசுவாமி சிறப்பு அலங்காரமான பந்தளம் மன்னர் வழங்கிய திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

தொடர்ந்து தீபாரதனை நடைபெறும். இதையடுத்து மாலை 6.30 மணியளவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பசுவாமி ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மகரஜோதியை காண பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிக்கைப்புரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நான்கு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை கண்டுகளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in