

கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்துக்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். 2017-ம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஈஷாவுக்கு வரும் மக்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். நடப்பாண்டு ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவுக்கு வந்து சென்றுள்ளனர்.
மேலும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழுவாக வரும் அந்த பக்தர்கள் சமைத்து உண்பதற்காக, வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே தனி இடவசதியும், கூடுதலாக இலவச கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஈஷாவுக்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோவையின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.
மேலும், ஆதியோகி சிலைக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் வாடகைக் கார் ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம், கோவையில் ஆன்மிக சுற்றுலாவுடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக பொருளா தாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.