Last Updated : 11 Jan, 2024 05:07 AM

 

Published : 11 Jan 2024 05:07 AM
Last Updated : 11 Jan 2024 05:07 AM

ஆண்டாள் திருப்பாவை 26 | உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..!

படம்: ஃபேஸ்புக்

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே!
சாலப் பெரும்பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

பாவை நோன்புப் பெண்களின் கடமைகளாக சில வழக்கங்கள் கூறப்படுகின்றன. அதிகாலை நீராடுதல், அணிகலன்கள் அணியாதிருத்தல், நெய், வெண்ணை உள்ளிட்ட பால் பொருட்களை நீக்குதல், தவறு செய்யாமை, தானம் செய்தல், புறங்கூறாமை போன்ற நற்குணங்களை கடைபிடிப்பது அவசியமாகிறது. உலக மாயையில் இருந்து விடுபட்டு, இறைவனின் திருவடிகளில் சரணடைந்தால் அனைத்து செல்வங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.

பக்தர்களை உன் மீது மயக்கம் கொள்ளச் செய்த கண்ணனே! நீ நீல நிறத்தவன். யாதவ குலவிளக்கு போன்றவன். ஆலின் இலையில் துயில் கொள்பவன். நாங்கள் மேற்கொள்ள விருக்கும் நோன்புக்கு தேவையான வெண்மை நிறம்கொண்ட பாஞ்சசன்யம் போன்ற வலம்புரி சங்குகளையும், அகலமான பறை போன்ற வாத்தியங்களையும் எங்களுக்கு அருள்புரிந்து அளிக்க வேண்டும். பல்லாண்டு பாடுபவர்களையும், மங்கல தீபங்களையும், கொடிகளையும் நீ எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆயர்பாடிப் பெண்கள் கண்ணனை வேண்டுகின்றனர்.

பஞ்சசன் என்ற அசுரன், சாந்தீபனி முனிவரின் மகனைக் கொன்றுவிட்டு கடலில் மறைந்தான். தன்னிடம் சீடனாகச் சேர்ந்த கண்ணனிடம் குருதட்சணையாக தன் மகனை மாய்த்த அசுரனை பழிவாங்க வேண்டும் என்று முனிவர் கூறினார். அதற்கு கண்ணனும் உடன்பட்டு, அசுரனை அழித்து, அவனை சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டான். அந்த சங்குதான் பாஞ்சசன்யம். அசுரசங்கு என்பதால் அதை ஊதும்போது அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x