ஆண்டாள் திருப்பாவை 24 | கண்ணனுக்கு பல்லாண்டு பாடுவோம்..!

ஆண்டாள் திருப்பாவை 24 | கண்ணனுக்கு பல்லாண்டு பாடுவோம்..!
Updated on
1 min read

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்!

பாவை நோன்பைக் கடைபிடிக்கும் பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கண்ணனும் அவர்களுக்கு அருட்காட்சி அளிக்கிறான். பண்டைய காலத்தில் அரசபையில் மன்னனை வாழ்த்திப் பாடிவிட்டு, புலவர்கள் தங்கள் விண்ணப்பத்தை முன்வைப்பார்கள். அதுபோல இப்பெண்கள் கண்ணனைப் புகழ்ந்து அவனுக்கு பாமாலை சூடி, தங்களுக்கு அருள்புரிய வேண்டுகின்றனர்.

'கமலக் கண்ணா! மேக வண்ணா! வாமன அவதாரத்தில் திருவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை அளந்தாய். ராமாவதாரத்தில் தவறு செய்த ராவணனை இலங்கைப் போரில் வென்றாய். கண்ணனாக அவதரித்தபோது சக்கர வடிவில் வந்து மாயங்கள் செய்த சகடாசுரனை காலால் உதைத்தாய். விளாங்கனி வடிவாக வந்த அசுரன் மீது, கன்று வடிவில் வந்த அசுரனை தடியாக வீசினாய். இந்திரனின் கோபத்தால் தொடர்ந்து பெய்த மழையில் இருந்து மக்கள், பசுக்களைக் காப்பதற்காக கோவர்த்தன மலையையே குடையாகத் தாங்கினாய். நீ வாழ்க! உன் கையில் உள்ள வேலும் வாழ்க! உடனே வந்து எங்களுக்கு அருள்புரிவாய்' என்று ஆண்டாளின் தோழிகள், பலவாறு கண்ணைப் புகழ்ந்து பாடி அவனருள் வேண்டி நிற்கின்றனர்.

இப்பாசுரம் மூலம் இறைவனின் கருணை வெளிப்படுகிறது. கிருத யுகத்தில் மகாபலியிடம் மூவடி மண் வேண்டி உலகை அளத்தல், த்ரேதா யுகத்தில் ராமனின் வலிமை, அசுரர்களை அழித்தல், துவாபர யுகத்தில் கண்ணனின் வீரம், மனிதர்கள் மட்டுமல்லாது ஐந்தறிவு உயிரினங்களை காக்கும் குணம் ஆகியன கூறப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in