Last Updated : 07 Aug, 2014 12:00 AM

 

Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

அகத்தியர் வழிபட்ட திருத்தலம்

சென்னை வில்லிவாக்கத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அகஸ்தீஸ்வரர் ஆலயம் பல சிறப்புகளைக் கொண்டதாகும். அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் இங்குள்ள சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் பெயரில் மூலவராக இருக்கிறார். பரமசிவனுக்கும் பார்வதிதேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைப்பெற்றபோது தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், யோகிகளும் ஒரே இடத்தில் கூடியதால் தென்நாடு உயர்ந்து வடநாடு தாழ்ந்தது. இதனைச் சமப்படுத்த குள்ளமுனியாம் அகத்தியரை சிவபெருமான் தென்நாட்டுக்கு அனுப்பினார்.

தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார். வில்வலன், வாதாபி என்ற இரண்டு அசுர சகோதரர்களில் வாதாபியை அழித்து, வில்லவனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனைக் காட்டினார். இதனால் இத்தலம் வில்லிவாக்கம் என்று வழங்கப்படுகிறது.

அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது அம்பாள் திருமண கோலத்தில் பொன் நகைகள் அணிந்திருந்தாள்.எனவே அவள் ஸ்வர்ணாம்பிகை எனப்படுகிறாள்.

செவ்வாய் கோவில்

நவக்கிரகங்களில் அங்காரகன் [செவ்வாய்] தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கத் தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. அதனால் செவ்வாய் தோஷப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இங்கு தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். ஆடி மாதம் ஐந்து வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கே வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

ஐஸ்வர்ய வீரபத்திரர்

வீரபத்திரருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளது. குபேர திசை நோக்கி வீரபத்திரர் அமர்ந்துள்ளதால் ஜஸ்வர்ய வீரபத்திரர் என்றும் பெயர் உள்ளது. அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்வாசல் எதிரே வீரபத்திரர் உள்ளார். கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவர் அருகே வணங்கிய கோலத்தில் தட்சன் உள்ளார். முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. இங்குள்ள விநாயகரிடம் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

அன்புடன் தன்னை வந்து அடைந்தார்க்கு அருள்கூட்டும் திருத்தலம் இது. இத்திருத்தலத்தின் சிறப்பை அறிந்து வணங்க வருபவர்களுக்கும், அறியாமலேயே இக்கோவில் இருக்கும் இடத்தின் எல்லையில் கால் பதிப்பவருக்கும் பெரும்பலன் தரும் திருத்தலமாக அறியப்படுகிறது. பஞ்சமாபாதகரும் இத்தலத்தை அடைந்தவுடன் தூய்மை அடைவார் என்று இதன் தலபுராணம் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x