

திருப்பள்ளியெழுச்சி
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தருளாயே!
அதாவது, பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல், இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை என உம்மைப் பண்டிதர்கள் புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக் கூட தெரிந்து கொண்டதில்லை!
குளிர்ந்த வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசனே! நினைத்துப் பார்க்கக் கூட அரிதானவனே! எனினும் எளியவனாகி, எம்முடைய கண்முன்னே எழுந்தருளிக் குற்றங்கள் நீக்கி, எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே! பள்ளியெழுந்தருள்வாயாக! என்று கொண்டாடுகிறார் மாணிக்கவாசகர்.
(சீதம் - குளிர்ச்சி, ஏதம் - குற்றம், துன்பம்).
திருப்பள்ளியெழுச்சியின் இந்தப் பாடலை, சோம வார நாளில் மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் பாடுங்கள். மார்கழி மட்டுமின்றி மற்ற மாதங்களிலும் பாடுங்கள். பாடி, சிவனாரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வீட்டில் கருத்தொற்றுமை ஓங்கும். கவலைகள் பறந்தோடும். அமைதியும் நிம்மதியும் மனதுள் குடிகொள்ளச் செய்வார் சிவனார்!