Published : 11 Jan 2018 11:33 AM
Last Updated : 11 Jan 2018 11:33 AM
கேரளாவில் பேட்டைத் துள்ளல் நிகழ்வுக்கு பெருமைவாய்ந்தது எருமேலி. அதுபோலவே பேட்டைத் துள்ளலுக்கு பெருமைவாய்த்த கோயில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ளது. அதன் பெயர் பூதம்கர ஸ்ரீ தர்மசாஸ்திர ஷேத்திரம். தனு மாதத்தில் மூன்றாம் சனிக்கிழமை இங்கே பேட்டைத்துள்ளல் நடக்கிறது. இந்தக் கோயிலில் அய்யப்பன் குடிகொண்டிருக்கிறார். இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அய்யப்பனின் ஆருயிர் தோழனான வாவர் பள்ளியும் உள்ளது.
70 வருடங்களுக்கு முன் இக்கோயிலில் பேட்டைத் துள்ளல் துவங்கியது. பக்தர்கள் இருமுடி கட்டிக்கொள்வார்கள் , பக்திப் பரவசத்தால் சுட்டி குத்திக்கொள்வார்கள். கர்ணம் குத்தி மலை, மயிலாடும் பறை, காடன் மலை, சுரன் குன்னு மலை, குத்திருப்பான் மலை, ஈசப்பறா மலை, சீரம் குன்னு மலை ஆகிய ஏழு மலைகளும் சேர்ந்த இடம் கொட்டப்பாறை என்று அழைக்கப்படுகிறது. இங்கு பேட்டைத்துள்ளல் நடைபெறும்போது, களஞ்சூரில் உள்ள கொட்டப்பாறை மலையில், பொன்னம்பல மேட்டில் பூசாரி கர்மங்கள் செய்வார்.
மகர சம்க்ரம நாளில் பொன்னம்பல மேட்டில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இங்கே குன்றுகளைப் போல் உயர்ந்து நிற்கும் இரண்டு பாறைகளின் வழியே குளிர்மை நிறைந்த அருவி ஓடுவது கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது. பாறைகளின் இடையில் என்றும் வற்றாத தாமரை, அல்லி பூக்கள் நிறைந்த அழகான குளங்கள் உள்ளது. இந்தப் பேட்டைத் துள்ளல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது . “சுவாமி திந்தக்கதோம் அய்யப்பா திந்தக்கதோம்'' என்று தாளமேளத்துடன் பாட்டுப் பாடி வாவர் பள்ளிவாசலிலிருந்து பக்தர்கள் பேட்டைதுள்ளல் பரவசத்துடன் தொடங்கி ஊர்வலம் வந்து அய்யப்பன் கோயிலுக்குள் நுழைவார்கள்.
நோய்கள் தீர்க்கும் தலம்
கோலம்போட்டு (களமெழுது) பாட்டுப்பாடும் சடங்கு சபரிமலை மண்டலக் காலத்தில் நடைபெறுகிறது. எல்லா வருடமும் பாகவத சப்தாஹயக்ஜம், நவராத்ரி பூஜை ராமாயண மாசம் பூஜை, ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி , மீனம் மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் கொடியேற்றுத் திருவிழாவுடன் தொடங்கி ஆறாட்டு நடத்தி பண்டிகை நிறைவேறுகிறது. பண்டிகை தினத்தில் நாகராஜாவிற்கும் நாகா யக்ஷிக்கும் ஆயில்யம் தினத்தில் பூஜையும் ஆறாம் நாளில் பலியும் போடப்படுகிறது.
இந்த பேட்டைத் திருவிழாவை சாதிமத வேறுபாடின்றி எல்லா மதத்தினரும் சந்தோஷத்துடன் கொண்டாடுகின்றனர். அவல், சர்க்கரை, தேங்காய் பிசைந்து பிரசாதம் கொடுக்கப்படுகிறது. வாவர் கோவிலில் திருநீறு, குங்குமம் கொடுக்கப்படுகிறது. ஜன்னி வந்த நோயாளிகள் பேட்டைத் துள்ளலில் கலந்து கொண்டு நோயின்றி வீடு திரும்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT