முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Updated on
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள பிரசித்தி பெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 722-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று முன்தினம் இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அன்று காலை இடும்பாவனம் கேசவன் குழுவினர் நாகசுர கச்சேரி நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாலை ஷேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியிலிருந்து புனித கொடி அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் வைத்து, கொடி ஊர்வலம் தொடங்கியது. குதிரை, ஒட்டகங்கள் அணிவகுப்புடன், பேண்டு வாத்தியங்கள் முழங்க, தப்ஸ் கச்சேரி, வண்ணத்துப்பூச்சி கலைஞர்களின் நடனங்கள் என வண்ணமயமாக ஊர்வலம் நடைபெற்றது.

தர்காவிலிருந்து புறப்பட்டகொடி ஊர்வலம், ஜாம்புவானோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் கோரையாறு பாலம், பழைய பேருந்து நிலையம் வரை சென்று பின்னர் மீண்டும் தர்காவை வந்தடைந்தது. பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சிதர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி தலைமையில் தொடங்கியது. சிறப்பு துஆ ஓதி, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, புனித கொடி ஏற்றப்பட்டது.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் நவ.23-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. நவ.27-ல் கொடி இறக்கப்பட்டு, கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in