Published : 28 Dec 2017 11:19 AM
Last Updated : 28 Dec 2017 11:19 AM

2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள் - மேஷம்

நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி, திங்கள்கிழமை தட்சிணாயனம் ஹேமந்த ருதுவில், வளர்பிறையில் சதுர்த்தசி திதியில், சமநோக்கு கொண்ட மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்கினத்திலும், சுப்பிரம் நாமயோகம், வணிசை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.00க்கு 1.1.2018-ம் ஆண்டு பிறக்கிறது.

புதனின் லக்கினத்தில் இந்தாண்டு பிறப்பதால் கல்வித் துறை மேம்படும். போலிக் கல்வி நிறுவனங்கள் மூடப்படும். ஆசிரியர்களுக்குச் சம்பளம் உயரும். ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் மேலும் சில மாணவர் சேர்க்கை இடங்களை அரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டி வரும். புதிய பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மதிப்பெண் முறைகள் நடைமுறைக்கு வரும்.

10.03.2018 முதல் 02.05.2018 வரை சனியுடன் செவ்வாய் சேர்வதால் மின்சாரம் மற்றும் தீ விபத்துகள் அதிகரிக்கும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையும். போலி ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ளநோட்டைப் புழக்கத்தில் விடுபவர்கள் சிக்குவார்கள். நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும். மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒன்றுசேர்வார்கள்.

மத்திய அரசின் கை ஓங்கும். ஷேர் மார்க்கெட் சூடு பிடிக்கும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்வதால் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தீவிரவாதிகளைக் கண்காணிக்கவும் அதி நவீனச் செயற்கைக் கோள்கள் ஏவப்படும். பூமி விலை குறையும். கலப்பட உணவுக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படும்.

நீதித் துறையில் நீதிபதிகளின் தர்மம் மீறப்படும். நகரத்தைக் காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளைநிலங்கள் வீட்டு மனையாவதைத் தடுக்கச் சட்டம் வரும்.

மேஷ ராசி

கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீட்டில் தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமொழி, மாற்று மதத்தவர்களால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களுடைய திறமைக்குப் பரிசு, பாராட்டுகள் கிட்டும். விலையுயர்ந்த தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவி உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்களுடைய ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைவதால் குடும்பத்திலும் சலசலப்புகள் வரும். உங்களுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த சிலர் முயல்வார்கள். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள்.

சிறு சிறு விபத்துகள் நிகழும். இந்த 2018-ம் ஆண்டு முழுக்கவே நிழல் கிரகங்களான ராகு 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டி வரும். பழைய கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். உத்தியோகத்திலும் வேலைச்சுமை அதிகமாகும். செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து போகும். 10.3.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலகட்டங்களில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 03.5.2018 முதல் 30.10.2018 வரை கேதுவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் மறைமுக அவமானங்களும் வந்துபோகும். ஆனால், பதவி உயரும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். 02.08.2018 முதல் 29.8.2018 வரை சுக்ரன் 6-வது வீட்டிலே சென்று மறைவதனால் தங்க ஆபரணங்கள் தொலையலாம். கவனமாக இருக்க வேண்டும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை மாற்றத் திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கிக் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் தங்கள் பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். சனி சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். என்றாலும் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும் சம்பள உயர்வும் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு சமயோஜிதப் புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவுசுளிவுகளையும் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்துக்கு அருகிலுள்ள இலஞ்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுமாரர்சுவாமியை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டில் சுபிட்சம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x