ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நடைபெற்ற தாயார் ரங்கநாச்சியார் திருவடி சேவை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நடைபெற்ற தாயார் ரங்கநாச்சியார் திருவடி சேவை.
Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்க நாச்சியார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் நாச்சியார் நவராத்திரி உற்சவம் அக்.15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் நாளையுடன் (அக்.23) நிறைவடைகிறது. இந்த உற்சவத்தையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்க நாச்சியார் சந்நிதியில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் தினமும் மாலையில் புறப்பட்டு, கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால், நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் அன்று மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால், ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஆண்டுக்கான ரங்க நாச்சியார் திருவடி சேவை தாயார் சந்நிதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இதையொட்டி, ரங்க நாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனது திருவடிகளை பக்தர்களுக்கு காட்சியளித்தவாறே புறப்பட்டு, கொலு மண்டபம் வந்தடைந்தார். இரவு 7.30 மணிக்கு கொலு தொடங்கி, இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது.

அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரங்க நாச்சியார் புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்வில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தாயார் திருவடியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in