

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவாரத்திரி விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் வெள்ளி காம தேனு வாகனத்தில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோயிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3 முறை பவனி வந்தார்.
இறுதியாக தாலாட்டுப் பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.
7-ம் திருவிழாவான நேற்று காலை அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் வெளிப் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.