Published : 21 Dec 2017 12:17 PM
Last Updated : 21 Dec 2017 12:17 PM
இ
றையுணர்வு கொண்டோர் கடவுளுடன் ஐக்கியமாகும் வழியாகப் பாடல்கள் பாடி கூடவே ஆடுவதும் பக்தி மார்க்கத்தின் ஓர் அங்கமாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகெங்குமுள்ள பல்வேறு ஆன்மிக மரபுகளில் பாடலும் ஆடலும் இன்றியமையாத அங்கமாகத் திகழ்கின்றன. ஆடல், பாடல் வழியில் தியானம், சுய தேடல் முறைகளையும் அதன் பலன்களையும் மேற்கு நாடுகளில் பரப்பியவர் ஞானி ஜார்ஜ் குர்ஜிப். திபெத்தில் உள்ள பவுத்தத் துறவிகளிடமிருந்து அதைக் கற்றுத் தேர்ந்தார். அதற்கு அவர் ‘நிறுத்தும் பயிற்சிகள்’ என்று பெயரிட்டார். சூஃபித் துறவிகளும் இதுபோன்ற சாதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இறைநாட்டம், ஆத்மத் தேடல் உள்ள இருபது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சேர்ந்து பக்திப் பரவசப் பாடல்களைப் பாடிக்கொண்டே குர்ஜிப் ஆடுவார். ஒவ்வொருவரும் பாடலின் கதிக்கேற்ப தங்கள் வழியில் ஆடலாம்; குதிக்கக்கூடச் செய்யலாம்; திடீரென்று, “நிறுத்து” என்று கூறுவார். தானும் நிறுத்தி அமைதியாகிவிடுவார். ஆடிக் கொண்டிருந்தவர்கள் எந்த நிலையிலிருந்தாலும் அந்த நிலையிலேயே நின்றுவிடுவார்கள். ஒரு சில விநாடிகள் மூச்சையும் நிறுத்த வேண்டும். செயல்பட்டுக்கொண்டிருந்த உடலும், மனமும் ஸ்தம்பித்து நிற்கும்போது கற்சிலை ஆகிவிடுவார்கள்.
“அந்த ஒரு சில விநாடிகளில் அற்புதங்கள் உனக்குள் நிகழ்கின்றன. ஆட்டத்தில், அசைவில், செயல்பாட்டில் இருக்கும்போது திடீரென்று நீ நின்றுவிட்டால் ஒரு இடைவெளி நிகழ்கிறது. மூச்சுவிடுதல் உட்பட எல்லா செயல்பாட்டையும் திடீரென நீ நிறுத்திவிடும்போது நீ இரண்டாகப் பிரிகிறாய். இயங்கு விசையில் இருந்த மனமும் உடலும் திடீரென நிறுத்தப்பட்டதும் நிறுத்தாமல் தொடர்வதற்கு உடல் முயல்வதை உணர்வாய். ஆனால் நிறுத்திவிட்டாய். ஓர் இடைவெளி இப்போது உருவாகும். அப்போது உனது உடலை வெகு தொலைவிலுள்ள ஒன்றாக அசைவதற்கு முயற்சிக்கும் இயங்கு விசை கொண்ட ஒரு வஸ்துவாக உணர்வாய்.
நீ ஒத்துழைக்காமல் போவதால் நீ உடம்பிலிருந்து தனிமைப்பட்டிருப்பாய். நீ தேடும் இறைவட்டத்தின் மையத்தில், நீ வீசப்பட்டுக் கிடப்பதை அந்த ஒரு சில வினாடிகளில் உன்னால் உணரமுடியும். நீ தேடும் பரவசம் அந்த சில விநாடிகள் உன்னோடு கூடியிருக்கும்.
சத், சித், ஆனந்தம் ஒரு சில விநாடிகள் சாத்தியமாகின்றன. இதையே தொடர் பயிற்சி செய்து அதிகரித்துக்கொள்வதன் மூலம் அந்த அனுபவம் உனக்குள் நிலைத்துவிடுகிறது.” என்கிறார் குர்ஜிப்.
இதற்கு ஒப்பான முறை இந்தியாவில் உள்ள ‘விஞ்ஞான் பைரவ் தந்த்ரா’ நூலில் விளக்கப்பட்டுள்ளது. சக்தியின் கேள்வி ஒன்றுக்கு சிவன் அளிக்கும் 112 பயிற்சிகளாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
வடலூர் வள்ளலாரும் தனது சன்மார்க்கத் தொண்டர்கள் சூழ சத்திய ஞான சபையையும் சித்தி வளாகத்தையும் ஆடல் பாடலுடன் சுற்றிவந்து நிறைவுசெய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT