Published : 14 Dec 2017 12:13 PM
Last Updated : 14 Dec 2017 12:13 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மகரம்

வெளிப்படையாக மற்றவர்களை விமர்சிப்பதைக் கூட விரும்பாத நீங்கள், விரக்தியடைபவர்களை கனிவான பேச்சால் கரையேற்றுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று நல்லதையே செய்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார். ஏழரைச் சனி தொடங்குகிறதே… என்று பயப்படாதீர்கள்.

எலியும் பூனையுமாக அடிக்கடி சண்டை போட்டுக்கொண்ட கணவன், மனைவி இனி நகமும் சதையுமாக ஒன்றுசேர்வீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். இரவும் பகலுமாக உழைத்து குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். ஏமாற்றங்கள், தர்ம சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். சோர்ந்திருந்து களையிழந்த உங்கள் முகம் இனி மலரும்.

எல்லோருடனும் மனம் விட்டு பேசும் சூழ்நிலை உருவாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்றுசேர்வீர்கள். எதிரும் புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி அடுத்தடுத்து நடந்தேறும். மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும்.

வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். என்றாலும், விரய ஸ்தானத்தில் சனி அமர்வதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். ஆன்மிகவாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் அவ்வப்போது கைமாற்றாகக் கடனும் வாங்க வேண்டி வரும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் போராட வேண்டியது இருக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். திடீர் பயணங்கள் குறையும்.

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும்.

சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019, 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகிச் செல்வதால் தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

மாணவ, மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைவாற்றல் கூடும். கெட்ட நண்பர்களிடமிருந்து ஒதுங்கி இருங்கள்.

கன்னிப் பெண்களே! தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் கைகூடும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். பெற்றோரைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அரசியல்வாதிகளே! புள்ளி விவரங்களுடன் எதிர்கட்சியினரை தாக்கிப் பேசி கட்சி சகாக்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொகுதி மக்களுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினரே! கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது வாய்ப்புகளும் வரும்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிக்கவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். ஏழரைச் சனி தொடங்குவதால் சிலர் செய்து கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு மூத்த அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

இந்த சனிப் பெயர்ச்சி சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், போராடும் சக்தியையும், போராட்டத்தில் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீசுப்ரமணியரை சஷ்டி திதி நாளில் சென்று அர்ச்சனை செய்து வணங்குங்கள். மேலும் சாதிப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x