மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்., 15ல் நவராத்திரி விழா தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்., 15ல் நவராத்திரி விழா தொடக்கம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவ்வாண்டுக்கான நவராத்திரி விழா அக்., 15 முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி உற்சவ நாட்களில் மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துதல், தங்ககவசம் சாத்துதல், திருக்கல்யாணம் மற்றும் தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்த முடியாது. தினசரி மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மேற்படி பூஜை கால நேரங்களில் தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப் படமாட்டாது.

கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குத் தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும். மேலும் அக்., 15 முதல் 24ம் தேதி வரையிலும் கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கொலுச்சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்குபவர்கள், குறிப்பாக சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான இதர பொம்மைகளை வழங்குபவர்கள் உள்துறை கண்காணிப்பாளர் ஒப்படைக்கவேண்டும்.

நவராத்திரி அம்மன் அலங்காரம் விபரம்: அக்., 15 ஞாயிறு ராஜராஜேஸ்வரி, அக்., 16, 17ல் திங்கள் அர்ஜீனனுக்கு பாசுபதம் அருளியது, செவ்வாய் ஏக பாத மூர்த்தி, புதன்கிழமை கால் மாறி ஆடிய படலம், 19ம் தேதி வியாழக்கிழமை தபசு காட்சி, அக்., 20ம் வெள்ளிக்கழிமை ஊஞ்சல், 21ம்தேதி சனிக்கிழமை சண்டேசா அனுக்கிரக மூர்த்தி, 22ம் தேதி ஞாயிறு மகிஷாசுரமர்த்தினி, 23ம் தேதி திங்கள்கிழமை சிவபூஜை. இத்தகவல்களை கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in