

வீர தீரங்களுக்கு சொந்தக்காரர் எனப் பெயர் பெற்ற ஆஞ்சநேயர், உலகை இயக்கும் பஞ்ச பூதங்களையும் வெற்றி கண்டவர் என்ற பெருமையும் கொண்டிருந்தார். பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன், பஞ்சபூதங்களில் ஒன்றான சமுத்திரத்தைத் தாண்டியவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக இலங்கையைச் சென்றடைந்தவர், பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமாதேவியின் மகளான சீதையைக் கண்டவர், பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பால் இலங்கை தேசத்தை நடுநடுங்க வைத்தவர் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்..
‘அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்’
பஞ்சபூதங்களையும் வென்றவர் என்பது ராமாயணத்தில் அனுமனுக்குக் கிடைத்த பெருமை! சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனைப் பற்றியும், அவரது பராக்கிரமங்களைப் பற்றியும் கூறுவது என்பதால், அந்த பகுதிக்கு ‘சுந்தர காண்டம்’ என்று பெயர். கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு என்கிறார் பாலாஜி வாத்தியார்.
ஆகவே, அனுமனை வணங்க நினைப்பவர்கள், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். முடிந்தபோதெல்லாம், பாராயணம் செய்யுங்கள். இதனால் சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டுமே குடிகொள்ளும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.