Last Updated : 01 Dec, 2017 02:17 PM

 

Published : 01 Dec 2017 02:17 PM
Last Updated : 01 Dec 2017 02:17 PM

அண்ணாமலையானுக்கு அரோகரா..!

நம் உடலானது, பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவானது. எனவே, நாம் பஞ்சபூதத் தலங்களைத் தரிசிப்பது நம் அகத்துக்குள் உறையும் இறைவனைப் புறத்தில் தரிசிப்பதற்கு ஒப்பானது. புண்ணியம் நிறைந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இயற்கையின் இணையற்ற சக்திகளாய் விளங்கும் பஞ்ச பூதங்களான ஆகாயம், நீர், மண், காற்று, நெருப்பு ஆகியவற்றில், உலகில் உறையும் உயிரினங்களின் இன்றியமையாத தேவைகளான ஒளியையும் வெப்பத்தையும் ஒருங்கே வழங்குவது நெருப்பு! அளவில்லா பெருமைகள் கொண்ட அக்னியைக் குறிக்கும் பஞ்ச பூதத் திருத்தலம் திருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம் இது!

உலகையும் உலக உயிர்களையும் படைத்து வரும் பிரம்மாவுக்கு தான் மிகவும் உயர்ந்தவன் என்ற கர்வம் உதித்தது. ஆணவம் தலைக்கேறினால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்பார்கள். ஆனால் பிரம்மாவின் ஆணவமே ஆண்டவனை எதிர்ப்பதாகவே இருந்தது.

அலைகடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் திருமாலிடம் சென்றார் பிரம்மா. ‘இந்த உலகமே எனது படைப்பு. ஆகையால் நானே பெரியவன்; பெருமையில் சிறந்தவன்’ என்று இறுமாப்புடன் சொன்னார்.

அதைக் கேட்டதும் கொதித்துப் போனார் மகாவிஷ்ணு. அவன் கூற்றை மறுத்த விஷ்ணு, பிரம்மனான நீ எனது உந்தியில் இருந்து உதித்தவன் அல்லவா என்றார். அப்போது அங்கே வந்தார் நாரதர். விஷயம் அறிந்தார். ‘அதெப்படி.... உங்கள் இரண்டுபேரையும் விட, சிவபெருமானே பெரியவர்” என்றார். திரி கொளுத்திப் போட்டார்.

இரண்டுபேருமே சிவபெருமானிடம் சென்றார்கள். ‘முதலில் என் அடியையும் முடியையும் எவர் தொடுகிறீர்களோ... எவர் பார்க்கிறீர்களோ... அவர்களே பெரியவர்’ என்றார். அடுத்த கணமே விஸ்வரூபமெடுத்தார். பிறகு ஆதியும் இல்லாமல் அந்தமாகவும் இல்லாமல் மலையானார்; ஜோதியானார்.

திருவடியானது பாதாளங்களைக் கடந்து போய்க் கொண்டே இருக்க, திருமுடியானது ஆகாசத்தையும் கடந்து உள்ளுக்குள்ளே வளர்ந்து விரிந்து கொண்டே போக... திக்கித்திணறித்தான் போனார்கள் இரண்டுபேரும்.

மகாவிஷ்ணுவால், திருவடியை அடையவே முடியவில்லை. வராகமாய் நுழைந்து பார்த்தும் கதைக்கு ஆகவில்லை. பிறகு ஒப்புக்கொண்டு, சிவனாரை வணங்கினார்.

பிரம்மாவோ, அன்னப்பறவையென பறந்தார். நெருங்க நெருங்க, தாங்கவொண்ணா வெப்பத்தால் தகித்தார். அருட் பிழம்பு அல்லவா சோதிவடிவானவன். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துக்கு இணையானவன் அல்லவா ஈசன்! அப்போது, சிவனாரின் சிரசில் இருந்து பூமியை நோக்கி விழ வந்து கொண்டிருந்தது தாமரைப்பூ. அந்தப் பூவைக் கண்டதும், பூவைப் போலவே மலர்ந்தார். தாழம்பூவிடம் கெஞ்சினார். மன்றாடினார். திருமுடியைப் பார்த்தேன் என்று சொல்வேன். ஆமாம் என்று பொய் சாட்சி சொன்னால் போதும் என்றார். தாழம்பூவும் ஒத்துக் கொண்டது.

சிவபெருமானிடம், திருமுடி கண்டேன் என்று பிரம்மா சொல்ல... கொதித்துப் போனார் சிவனார். ‘பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. பொய் சொல்கிறாயே.’ என்று கோபம் கொண்டார். ’உண்மை தவறியதால் உனக்கு கோயில்களே இல்லாமல் போகட்டும்’ என்று சபித்தார் . பொய்க்குத் துணை போனதால், சிவனாரின் அர்ச்சனைக்குத் தாழம்பூ ஆகாத மலர் என்பதாயிற்று.

சிவபெருமானே முழு முதற் பரம்பொருள் என்பதை முற்றிலுமாக உணர்ந்த திருமாலும் பிரம்மாவும் அவரைப் போற்றினர்; நமஸ்கரித்தனர்; தவறை உணர்ந்தனர்; தொழுதனர்; அவர்களுக்கு கருணையுடன் லிங்கோத்பவராகக் காட்சி கொடுத்தருளினார்.

மலையே சிவம்... சிவமே மலையெனத் திகழும் அந்தச் சம்பவம் நிகழ்ந்த திருவிடம்... திருவண்ணாமலை. அந்தத் திருத்தலத்தில் தான் பிரமாண்டமாக நடைபெறுகிறது திருக்கார்த்திகை தீபத் திருவிழா.

நாளை 2ம் தேதி கார்த்திகை தீப நன்னாள். இந்த நாளில்... அண்ணாமலையாரை உண்ணாமுலையம்மனை மனதாரத் தொழுவோம்.

அண்ணாமலையானுக்கு அரோகரா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x