Published : 14 Dec 2017 12:12 PM
Last Updated : 14 Dec 2017 12:12 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: தனுசு

ந்திரியே எதிர்த்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். கலா ரசனை அதிகமுள்ள நீங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து கொண்டு முன்னேற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 முடிய உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

ஜென்மச்சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முன்பு போல நேரம் தவறி சாப்பிடுவதையோ, உணவருந்தாமல் இருப்பதையோ இனிமேல் செய்யாதீர்கள். முடிந்தவரையில் வறுத்த, பொரித்த அசைவ உணவுகள், வாயு பதார்த்தங்களை அறவே ஒதுக்கித் தள்ளுங்கள்.

சப்பாத்தி, முருங்கைக் கீரையைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். சில நேரங்களில் தூக்கமில்லாமல் தவிப்பீர்கள். நேரம் கிடைக்கும் போது நடைபயிற்சி செய்யுங்கள். உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வீரியத்தை விடக் காரியம் தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள்.

கணவன், மனைவிக்குள் நெருக்கம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். அவசரத்துக்குக் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். முக்கிய விஷயங்களையெல்லாம் மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் சந்தேகத்தைக் குறையுங்கள். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சிலர் சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும்.

யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019, 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பிள்ளைகளால் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும்.

சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019, 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் உங்களின் நிர்வாகத் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் விலையுயர்ந்த பொருள் இழப்பு வந்து நீங்கும்.

மாணவ, மாணவிகளே! மந்தம், மறதியால் மதிப்பெண் குறையும். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். கூடாப் பழக்கவழக்கங்கள் இலவசமாக நுழைய வாய்ப்பிருக்கிறது.

கன்னிப் பெண்களே! கல்யாணம் தள்ளிப் போகும். காதல் விஷயத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். இன்பெக்ஷன், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானதுதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் குடும்பப் பிரச்சினைகளை வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் தீர்த்துக் கொள்ளுங்கள். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். வழக்குகளை சந்திக்க நேரிடும். கோஷ்டி பூசலால் உங்கள் புகழ் குறையும்.

கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டிகள் அதிகமாகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வியாபாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம்.

உத்தியோகத்தில் பழைய பிரச்சினைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப் பாருங்கள். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று அலுத்துக் கொள்வீர்கள். அவசரப்பட்டு வேலையை விடுவதிலோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. பதவி உயர்வு, சம்பள உயர்வைப் போராடி பெறுவீர்கள். இந்தச் சனிப் பெயர்ச்சி பிரச்சினைகளால் வெறுத்துப் போயிருந்த உங்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தரும்.

பரிகாரம்: சிவகங்கை மாவட்டம், நாகநாதபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி பெருமாளையும், அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லி தாயாரையும் பவுர்ணமி திதி நாளில் சென்று ஏலக்காய் மாலை அணிவித்து வணங்குங்கள். கெடு பலன்கள் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x