Published : 14 Dec 2017 12:11 PM
Last Updated : 14 Dec 2017 12:11 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: சிம்மம்

ற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் நீங்கள், நிர்வாகத் திறமை அதிகம் உள்ளவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பல இன்னல்களைத் தந்த சனி பகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம், பயம் யாவும் நீங்கும். மனவலிமை கூடும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு கட்டும் பணி முழுமையடையும். குடும்பத்தில் அமைதி திரும்பும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் சனி அமர்வதால் முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள்.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியுமோ, முடியாதோ என்றவொரு தடுமாற்றம் வரும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிலர் அவர்களின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். வயிற்று வலி, இடுப்பு, கழுத்து வலியால் சிரமப்பட்டீர்களே! இனி வலி நீங்கி வலிமை கூடும். சனி பகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கண்ணைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம்பக்கத்தவரிடம் அளவாகப் பழகுங்கள்.

சனி பகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனி பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால் விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

சொந்தபந்தங்கள் வியக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பயணத்தின் போது சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் எடுத்த வேலைகளை இழுபறிக்குப் பின்னரே முடிக்க வேண்டி வரும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் கிடைக்கும்.

மாணவ,மாணவிகளே! சமயோஜித புத்தியைப் பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். விளையாட்டு, இசை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள்.

கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

வியாபாரம் செழிக்கும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்களும் உங்களின் செல்வாக்கை நினைத்து நட்புறவாடுவார்கள். கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி சிக்கல்கள் சிதறல்களிலிருந்து உங்களை விடுபட வைத்து சீரான வாழ்க்கையை அமைத்துத் தரும்.

பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு மதுரகாளியம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்று மாவிளக்கு ஏற்றி வணங்குங்கள். விரும்பியதெல்லாம் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x