Published : 28 Dec 2017 11:35 AM
Last Updated : 28 Dec 2017 11:35 AM

2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள் - மகரம்

கடல்போல் விரிந்த மனசும் கலகலப்பாகப் பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்களே! இந்த 2018-ம் வருடம் சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜிதப் புத்தியாலும் பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். கடன் பிரச்சினையில் ஒரு பகுதி தீரும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 10-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை அதிகரித்துக்கொண்டே போகும். முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும்.

அசிங்கப்பட்டுவிடுவோமோ அவமானங்களை சந்திக்க நேரிடுமோ யாரேனும் தன்னைப் பற்றித் தவறாகச் சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்துக்கொண்டேயிருப்பீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். உங்களிடம் திறமை குறைந்துவிட்டதாகச் சில நேரங்களில் நினைத்துக்கொள்வீர்கள். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 11-ம் வீட்டில் சென்று அமர்வதால் புகழ், கவுரவம் ஒருபடி உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.

சபைகளில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி பகவான் 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் தன்னம்பிக்கை குறையும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப் பாருங்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச்செலவுகள் அதிகமாகும். பணம் வந்தாலும் கட்டுப்படுத்த முடியாதபடி செலவுகளும் இருந்துகொண்டேயிருக்கும். ரத்தத்தில் இரும்புச் சத்துகள் குறைய வாய்ப்பிருக்கிறது உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும்.

மனைவிக்குக் கர்ப்பப்பைக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, முதுகுத் தண்டில் வலி, ரத்த அழுத்தம் வந்து போகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது. 1.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும் சனியும் சேர்வதால் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கடன் பிரச்சினை அதிகரிக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் யாருக்காகவும் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். அவ்வப்போது மூச்சுப் பிடிப்பு, வாயுக் கோளாறு, ரத்த சோகை வந்து செல்லும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும்.

03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டு நிம்மதியை இழந்துவிடாதீர்கள். விளம்பரங்களைப் பார்த்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம். அலர்ஜி வரக்கூடும். 16.05.2018 முதல் 10.06.2018 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்னுடைய நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய வருடமாக அமையும்.

பரிகாரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு அருகில் உள்ள குருசாமிபாளையம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி, ஸ்ரீவள்ளி, தெய்வானையை செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தப் புத்தாண்டு நற்பலன் தருவதாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x