Published : 16 Dec 2017 11:12 AM
Last Updated : 16 Dec 2017 11:12 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

இந்தப் பூவுலகத்தாரை, பக்தி மார்க்கத்தில் உய்ய வைக்க ஸ்ரீபூமாதேவியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் திவ்யதேசத்தில் 'பெரியாழ்வார்' என்றழைக்கப்படும் 'ஸ்ரீவிஷ்ணுசித்தரின்' வளர்ப்பு மகளாக, நந்தவனத்திலே... துளசிச் செடிகளின் மத்தியில், அவதரித்தவர்.

மாலவனின் மீது மாளாத அன்பும் பக்தியும் கொண்டு பூமாலையோடு பாமாலையும் தொடுத்து மூடி, மாலவனுடன் இரண்டறக கலந்தவர். எனவே இறைவனையே ஆட்கொண்டதால் 'ஆண்டாள்' எனவும், கோதை நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயர் பெற்றவர்.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் இயற்றிய பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்தான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் மீது ஆண்டாள் இயற்றிய பாடல்கள் 143 ஆகும். 'நாச்சியார் திருமொழி' என்கிற தலைப்பில் ஆண்டாள் அருளிச்செய்த பாடல்களின் ஒரு பகுதியே 'திருப்பாவை'.

திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஸ்ரீமாலவனை தரிசிக்கச் செல்லும் 'ஆண்டாள்', அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருக்கும் தம் தோழியரை எழுப்பி அவர்களுக்கும் அந்த பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை துயில் எழுப்புவது போல் மாலவனின் பெருமைகளைக் கூறுவது போல், ஆண்டாள் உருகி உருகிப் பாடினாள். அதுவே திருப்பாவை!

'திருப்பாவை' இவ்வுலக சுகபோகங்களில் தம்மை மறந்து மாயை எனும் மயக்கத்தில் உழலும் இவ்வுலக மாந்தர்களை விடுவித்து, இறைவன் திருவடியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தூக்கத்தில் இருந்து துயில் எழுப்பது என்பதன் உட்கருத்து!.

அதே வேளை, மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதில் வீசும் காற்றில் பிராணவாயு அதிகமாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. எனவே உடலும் உயிரும் ஆன்ம நலத்துடன் வாழ வேண்டி திருப்பாவை நோன்பு நோற்போம். ஸ்ரீஆண்டாளின் திருவாக்குப்படி என்றும் வளமோடு வாழ்வோம்!

திருப்பாவை 1

மார்கழித்திங்கள்மதிநிறைந்தநன்னாளால்

நீராடப்போதுவீர்போதுமினோநேரிழையீர்!

சீர்மல்கும்ஆய்ப்பாடிச்செல்வச்சிறுமீர்காள்!

கூர்வேல்கொடுந்தொழிலன்நந்தகோபன்குமரன்

ஏரார்ந்தகன்னியசோதைஇளஞ்சிங்கம்

கார்மேனிச்செங்கன்கதிர்மதியம்போல்முகத்தான்

நாராயணனேநமக்கேபறைதருவான்

பாரோர்புகழப்படிந்தேளேரெம்பாவாய்

'மாலோ மாம் மார்கசீர்ஷ!' மாதங்களில் நான் மார்கழி என கண்ணன் உரைத்துள்ளான். எனவே மார்கழி மாத பெளர்ணமி நன்னாளில் நீராடப் போவோம். நீராடி விட்டு பாவை நோன்பு நோற்போம். செல்வச் சிறப்புகள் மிக்க ஆயர்பாடியில் உள்ள சிறுமிகளே, கூர்மையான வேல் போன்ற ஆயுதத்தைக் கொண்டு பகைவர்களை அழிக்கும் தொழிலைக் கொண்ட நந்தகோபன் மற்றும் அழகிய கண்களையுடைய யசோதாப் பாட்டி ஆகியோரது செல்லக் குழந்தையாம் கண்ணன்.

இளம் சிங்கத்தைப் போன்ற வீரமும், மண்ணை வாழவைக்க வல்ல கருமையான மேகத்தை போல தம் பக்தர்களின் மீது கருணையை மொழியக் கூடிய கண்ணன் கருமை நிறத்தில் ஒளி வீசும் பூர்ண சந்திரனின் பிரகாசத்துடன் கூடிய முகத் தோற்றம் உள்ளவனுமான கண்ணன் தான் நாராயணன்!

அவனே நமக்கு எல்லாவற்றையும் வழங்க வல்லவன். எனவே அவனது புகழைப்பாடி பாவைநோன்பு நோற்போமாக! நாம் ஏதாவது யாசித்தோமானால், அது அந்தப் பொருள் உள்ளவரால் மட்டுமே கொடுக்க இயலும். இங்கே சகலத்துக்கும் உரியவன் பகவான் மட்டுமே! எனவே ஆண்டாள் போலவே அவனை மெய்யுருகி வேண்டுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x