Published : 14 Dec 2017 12:10 PM
Last Updated : 14 Dec 2017 12:10 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மேஷம்

மூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலறவைத்த, அழவைத்த சனி பகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள்.

உங்களின் பாக்கியாதிபதியும் லாபாதிபதியுமான சனி பகவான் யோகஸ்தானத்தில் அமர்வதால் உங்களுக்குச் சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியதை திருப்பித் தருவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பருமனாக இருந்த நீங்கள், பார்ப்பதற்கு அழகாவீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்காமல் தம்மால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்து முன்னேற வேண்டுமென்று முடிவெடுப்பீர்கள். மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சனி பகவான் 3-ம் வீட்டை பார்ப்பதால் சொந்தபந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் முக்கிய விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். சுக்ரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019, 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இடம், பொருள், ஏவலறிந்து செயல்படுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். திடீரென்று அறிமுகமாகிறவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். சனி பகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். மின்னணு, மின்சார சாதனம் பழுதாகும். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகிச் செல்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

மாணவ, மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. தலைமைக்கு கட்டுப்படுங்கள். சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும்.

வியாபார ரகசியங்களை இனி கசியவிட மாட்டீர்கள். வேலையாட்கள் இனி விசுவாசமாக நடந்துகொள்வார்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரி உறுதுணையாக இருப்பார். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

இந்த சனி மாற்றம் எந்நேரமும் கவலையும், கண்ணீருமாக இருந்த உங்களுக்கு நிம்மதியையும் நிதியையும் வழங்குவதாக அமையும்.

பரிகாரம்: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி எனும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு சூலத்தம்மனை பவுர்ணமி திதி அல்லது ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் பாலாபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வணங்குங்கள். சகல வளமும் பெருகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x