Last Updated : 08 Nov, 2017 03:13 PM

 

Published : 08 Nov 2017 03:13 PM
Last Updated : 08 Nov 2017 03:13 PM

எமனுக்கு அருளிய தண்டீஸ்வரர்! வேளச்சேரி மகிமை!

சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்ரீதண்டீஸ்வரர் கோயில், புராதனமான ஆலயம். புராணப் பெருமை கொண்ட திருத்தலம். இங்கு வந்து தண்டீஸ்வரரைத் தரிசனம் செய்தால், நீண்ட ஆயுள் கிடைக்கும். நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் நோய் நொடியில்லாமலும் வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்!

சென்னை கிண்டிக்கு அருகில் உள்ளது வேளச்சேரி. முக்கிய வீதியிலேயே அமைந்துள்ளது ஸ்ரீதண்டீஸ்வரர் திருக்கோயில். வாழ்க்கையில் எதையெல்லாம் இழந்து தவிக்கிறோமோ... இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால், அதை ஏதேனும் ஒரு ரூபத்தில் திரும்பப் பெறலாம் என்பது இந்தத் தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

சோமாசுரன் என்பவன் மகா அரக்கன். இந்த கொடுமைக்காரன், பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துச் சென்றான். அவற்றை நாராயணன், மீட்டெடுத்தார் என்கிறது புராணம். அசுரனிடம் இருந்ததால், தங்களுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டதாக வருந்தின வேதங்கள். இந்த தோஷங்கள் நீங்குவதற்காக, சிவபெருமானை நோக்கி, கடும் தவம் புரிந்தன. அப்படி வேதங்கள் தவம் புரிந்த இடமே, வேதச்சேரி. அதுவே வேளச்சேரி என பின்னர் மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

நான்கு வேதங்கள் இழந்திருந்த புனிதத்தைத் தந்தருளினார் ஈசன். இங்கே உள்ள சுவாமியின் திருநாமம் தண்டீஸ்வரர்.

அதேபோல், மார்க்கண்டேயனுக்கு ஆயுள் முடியும் தருணம் வந்தது. அவனை இறக்கச் செய்து அவனின் ஆயுளை முடிப்பதற்காக எமதருமன் பாசக்கயிறுடன் வந்தார். ஆனால் மார்க்கண்டேயனின் ஆயுளைக் காப்பாற்றும் பொருட்டு, எமதருமனை எட்டி உதைத்தார் சிவனார். கூடவே, எமதருமனின் அந்தப் பதவியையும் பறித்துக் கொண்டார். இதனால் பூவுலகில், எவருக்கும் மரணமே நிகழாத நிலை ஏற்பட்டது.

இதில் தவித்துக் கலங்கிய எமன், இழந்த தன்னுடைய பதவியைப் பெறுவதற்காக, சிவனாரின் தலங்களுக்குச் சென்றான். தவமிருந்தான். வணங்கினான். வழிபட்டான். ஆனாலும் மனமிரங்கவில்லை ஈசன். நிறைவாக, வேதங்கள் வழிபட்டுப் புனிதம் அடைந்த தலத்தை அறிந்து, இங்கே வந்தான். ஓரிடத்தில் தீர்த்தக் குளம் ஒன்றை உருவாக்கினான். தினமும் சிவபூஜை செய்தான். தன் நித்தியானுஷ்டக் கடமைகளைக் குறைவறச் செய்தான். அங்கே... அவனின் கடும் தவத்தில் மகிழ்ந்த பரமேஸ்வரன், எமதருமனுக்கு தரிசனம் தந்தார். அத்துடன் இழந்த அவரின் பதவியையும் வழங்கினார். கூடவே எமதருமனுக்கு தண்டம் ஒன்றையும் வழங்கினார். இதனால் இந்தத் தலத்து இறைவனுக்கு தண்டீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

பொதுவாக வீரபத்திரர் நின்ற நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் வேளச்சேரி தலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீரபத்திரர். இது, வேறெங்கும் இல்லாத விசேஷம் என்று பூரிக்கின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x