Last Updated : 13 Nov, 2017 12:24 PM

 

Published : 13 Nov 2017 12:24 PM
Last Updated : 13 Nov 2017 12:24 PM

‘பூரச் சலங்கை’ விழாவை அடுத்து சிவகாமிக்கு இன்று கல்யாணம்!

ஆடல் நாயகன், தில்லையம்பலத்தான் என்றெல்லாம் போற்றிக் கொண்டாடப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், பூரச்சலங்கை விழாவை அடுத்து இன்று 13.11.17 அன்று இரவு 8 மணிக்கு விமரிசையாக நடைபெறுகிறது சிவகாமி நாயகிக்கு திருக்கல்யாணத் திருவிழா!

நடன நாயகன் குடிகொண்டிருக்கும் சிதம்பரம் ஸ்ரீநடராஜ பெருமான் ஆலயத்தில், ஆண்டு தோறும் ஐப்பசி பூர உத்ஸவத் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் நாயகியான ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் தினமும் அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி தருவாள்.

இந்த வருடமும் விழா துவங்கி சிறப்புற நடைபெற்று வருகிறது. திருவீதியுலா வருதல் என தினமும் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடக்கின்றன.

அம்பாளுக்கு ஆடிப்பூரமும் ஐப்பசிப் பூரமும் ரொம்பவே விசேஷம். அதேபோல் ஆடித் தபசு க் காட்சி எப்படி சங்கரன்கோவிலில் பிரசித்தமோ... அதேபோல் இங்கேயும் ஐப்பசியில் தபசுக் கோலத்தில் அற்புதமாகக் காட்சி தந்தருள்வாள் அன்னை சிவகாமி.

ஆடிப்பூர நாளில், அம்பாள் பெரியமனுஷியாகிறாள் என்பதாக ஐதீகம். அதேபோல் இந்த ஆடி முடிந்து ஐப்பசி வரும் போது, அம்பாளுக்கு திருமண நிகழ்ச்சி அரங்கேறும். இந்தத் திருமணக் காட்சியை தரிசித்தால், கல்யாண வரன் தேடி வரும் என்பது உறுதி என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

வருடந்தோறும். மதுரை மீனாட்சி அம்பாளுக்கு சித்திரையில் திருமணம் நடந்தேறும். பங்குனி மாதத்தில் சென்னை மயிலாப்பூர் நாயகி கற்பகாம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் அதேபோல், ஐப்பசியில், சிதம்பரம் உத்ஸவர் சிவானந்த நாயகி, திருநெல்வேலி காந்திமதி அம்பாள், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் முதலானோருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தேறும். எனவே இதையொட்டிய விழா வைபவங்கள், கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் உள்ள ஏனைய அம்பாளுக்கும் பத்து நாள் விழாவும் உத்ஸவமும் சிறப்புற நடைபெறும்.

நேற்றைய தினம், தில்லைச் சிதம்பரத்தில், ஐப்பசி பூர விழா நடைபெற்றது. இந்த நாளில் அம்பாளுக்கு பூரச்சலங்கை கட்டுவது வழக்கம். அதாவது, அம்பாளின் மடியில் மங்கலப் பொருட்களை கட்டுகிற நிகழ்ச்சி இது. அதில், முளைப்பயறு, நெல்மணிகள், அவல், அரிசி, மஞ்சள் கிழங்கு, சில்லறைக் காசுகள், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு, மடியில் வைத்துக் கட்டுகிற வைபவம் இது. இந்த நிகழ்வு, நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து இன்று 13.11.17 காலையில் அம்பாள் தபஸ் கோலத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளைத் தரிசித்தார்கள்.

பிறகு அதையடுத்து இன்று இரவு 8 மணிக்கு சோமாஸ்கந்த பெருமானுக்கும் ஸ்ரீசிவானந்த நாயகிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்வார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x