

காஞ்சி காமாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, படவேடு ரேணுகாதேவி உள்ளிட்ட பல கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது குறித்துப் படித்திருப்போம். பொதுவாகவே ஆதிசங்கரர்... ஆலயங்கள் பலவற்றிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தார் என அந்தந்தக் கோயிலின் ஸ்தல புராணங்களும் தெரிவிக்கின்றன.
’காஞ்சிபுரத்திலே ஸ்ரீசக்ரம், மாங்காட்டிலே அர்த்தமேரு ஸ்ரீசக்ரம், திருவானைக்காவிலே ஸ்ரீசக்ர ரூபமான தாடகம்... இன்னும் இதுபோன்ற பல கோயில்களில், ஆதிசங்கர பகவத் பாதரால் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் விசேஷ காரணங்கள் என்ன சுவாமி? ’என்று காஞ்சி மகாபெரியவரிடம் பக்தர் ஒருவர் கேட்டார்.
அதற்கு காஞ்சி மகான் என்ன சொன்னார் தெரியுமா?
இதுகுறித்து தெய்வத்தின் குரல் நூலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
’’அம்பாளின் சக்தியானது, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்கமுடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவில், அகிலாண்டேஸ்வரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேஸ்வர அவதாரமான ஆச்சார்யாள், ஸ்ரீசக்ரமாகவும் சிவச் சக்ரமாகவும் இரண்டு தாடகங்களைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமன்படுத்தி, அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரியான காமாட்சியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது, அதே ஆச்சார்யாள், அந்த உக்ரக் கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீசக்ரமாக ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம சௌம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணைக் கடாக்ஷம் செய்து வருகிறாள்’’ என்றார் காஞ்சி மகான்!
ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயிலுக்கு தனித்தான சக்தி ஒன்று உண்டு. அந்த ஆலயங்களில், முறையே பிரார்த்தித்து வணங்கினால், தீயசக்திகள் நம்மை அண்டாது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.