Last Updated : 04 Nov, 2017 03:57 PM

 

Published : 04 Nov 2017 03:57 PM
Last Updated : 04 Nov 2017 03:57 PM

சிற்ப பிரமாண்டம்... நெல்லையப்பர் கோயில்!

நெல்லையப்பர் கோயிலில், விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா. கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படுகின்றன விழாக்கள்!

இந்தவேளையில்... பிரமாண்டமான நெல்லையப்பர் கோயிலின் ஸ்தலச் சிறப்புகளை இன்னும் பார்ப்போமா?

ஆலயத்தின், தெற்குப் பிராகாரத்துக்கு நடுவே தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு முன்னதாக, சங்கிலி மண்டபம் எனும் அற்புதமான கலைநுட்பத்துடன் கூடிய பகுதி அமைந்து உள்ளது. அதையொட்டி நடுக்கோபுரமும் கொள்ளை அழகு. பிராகார மண்டபத்தில், உயரமாக, பெரிய கல்தூண்கள், அந்த இடத்தையே அழகூட்டிக் காட்டுகின்றன.

கோயிலில் உள்ள தெற்குப் பிராகாரம் சுமார் 387 அடி நீளம் கொண்டதாகவும் சுமார் 42 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து உள்ளது. இந்தப் பகுதியில், கோயிலுக்குத் திருப்பணி செய்தவர்களும் மன்னர் பெருமக்களும் சிலையாகக் காட்சி தருகின்றனர்.

இதேபோல், மேற்குப் பிராகாரமும் பிரமிக்கத்தக்கதுதான். இது சுமார் 285 அடி நீளம் கொண்டதாகவும் சுமார் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து, பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. இதன் நடுவே மேலக் கோபுரம் அமைந்துள்ளது. இங்கே உள்ள சுதை வடிவிலான பிள்ளையார், நம்மை கொள்ளை கொள்கிறார்!

சுமார் 387 அடி நீளமும் சுமார் 42 அடி அகலமும் கொண்டு அமைந்திருக்கிறது வடக்குப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் அரங்கம் அமைந்து உள்ளது. மேலும் ஸ்வாமிக்கு அபிஷேகத்துக்கு எடுக்கப்படும் ஆறுகாலத் தீர்த்தக்குண்டம் இங்கே உள்ளது. அடுத்து ஈசான மூலையில் யானைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பிராகாரம் சுமார் 295 அடி நீளத்திலும் அகலம் 40 அடியாகவும் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பக்கம் எழுபத்தி எட்டு தூண்களுடன் அழகுற அமைந்துள்ளது சோமவார மண்டபம். இந்த மண்டபத்தில்தான் புரட்டாசி மாதத்தில் விமரிசையாக நடைபெறுகிறது நவராத்திரி விழா. அதேபோல், கார்த்திகை மாதத்தில் சோமவார மண்டபப்படிகளும் நடைபெறுகின்றன. இந்த மண்டபத்தின் பகுதியில் வன்னியடிச் சாத்தனார். வயிரவர் சந்நிதிகளும் யாகசாலையும் உள்ளன. அதையடுத்து சந்நிதியின் ரிஷப மண்டபமும் அதற்கு வடக்குப் பகுதியில் நவக்கிரக மண்டபமும் அமைக்கப்பட்டு உள்ளது. இத்தனையும் சுற்றிவர... கோயிலை செதுக்கிச் செதுக்கி எழுப்பிய மன்னர் பெருமக்களும் சிற்பிகளும் வேலையாட்களும் நினைவுக்கு வந்து, வியக்கச் செய்வார்கள்.

ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீநெல்லையப்பர். அம்பாள் - ஸ்ரீகாந்திமதி . இங்கே நெல்லையப்பர் சந்நிதியையொட்டி நுழைவாயில் கோபுரம், காந்திமதி அன்னை சந்நிதியையொட்டி நுழைவாயில் கோபுரம் என அமைந்துள்ளது சிறப்பு. இரண்டு கோபுரங்களும் அத்தனை உயரம். பார்க்கவே அவ்வளவு வியப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x