Published : 15 Nov 2017 05:10 PM
Last Updated : 15 Nov 2017 05:10 PM

வார ராசிபலன் 16/11/2017 முதல் 22/11/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசியை எட்டாம் பார்வையால் பார்ப்பதன் மூலம் மன திடம் அதிகரிக்கும். அதே வேளையில் அஷ்டமத்துச் சனியால் வீண்குழப்பம் ஏற்படலாம். தனஸ்தானத்தை சூரியன் - புதன் - சனி ஆகியோர் பார்ப்பதன் மூலம் பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வதிலும், பரிந்து பேசும்போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது.  வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். தம்பதிகளிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்கள் கல்வியில் அதிகம் சிரத்தையெடுத்துப் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு இலுப்பை எண்ணையால் தீபம் ஏற்றி வணங்கவும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தேவகுருவுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். முயற்சிகள் வெற்றி தரும். தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். சுபச்செலவுகள் அதிகமாகும். ராசியை சனி பார்ப்பதால் திடீர் கோபம் ஏற்பட்டு நீங்கும். வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கவும். பங்குதாரர்களிடம் பேச்சில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் சிலரது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். பெண்கள் மற்றவர்களுக்காக  எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.  அரசியல்வாதிகள் சிறிய வேலையையும் முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசி பழகவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்கவும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ரண ருண ஸ்தானத்தில் வக்கிரம் பெறுகிறார். சிறிது தடைகள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கலாம். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் நன்மை தரும். தொலைதூரத் தகவல்கள் சாதகமாக இருக்கும். வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். பணியாளர்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்குப் பண வரவு இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடவும்.

 

 கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் அனுகூலமான சஞ்சாரம் செய்கிறார். தனவாக்கு அதிபதி சூரியன் பஞ்சம பூர்வ ஸ்தானத்திற்கு மாறுகிறார். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தைச் சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கைக்  கண்டு பிறருக்குப் பொறாமை உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். வீடு, மனை, வாகனம் தொடர்பான விவகாரங்களில் சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த பணிகள் நிறைவடையும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும். பெண்களுக்குக் காரிய தடைகள் நீங்கும். அரசியல்வாதிகள் வீண் சச்சரவுகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனைத் தரிசித்து பஞ்ச முக தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்திற்கு குருவின் சாரம் பெற்று புதன்- சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மிளிரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனியின் பார்வை ராசியில் விழுவதால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் பார்வை விழுவதன் மூலம் நிறைவான லாபம் வரும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது.

மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். சகோதரர் வழியில் பிரச்சினைகள் அகலும். உறவினர்கள், நண்பர்களால் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்குச் சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்குப் புகழும், கவுரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வியை பற்றிய சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் தைரிய ராசியில் சூரியன், சனியுடன் இணைந்து செவ்வாய் வீட்டில் சஞ்சரிக்கிறார். நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாகப் பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ அறிவு அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: துளசியைப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x