

இதோ... கார்த்திகை தீபப் பெருவிழா நெருங்கி விட்டது. வரும் டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, திருக்கார்த்திகை தீப விழா. இதையொட்டி கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம். இன்னும் சிலர், இப்போதே வீட்டு வாசல்களில், விளக்கேற்றி வைத்து, வீட்டை விளக்குகளாலும் ஒளியாலும் அலங்கரித்திருப்பார்கள்.
அகல் விளக்கின் தாத்பர்யத்தைப் பார்ப்போமா.
அகல் விளக்கு - சூரியன் எனப்படுகிறது. நெய் அல்லது எண்ணெய் அல்லது திரவம் - சந்திரனைக் குறிக்கிறது. திரி - புதனைக் குறிப்பிடுகிறது.
அதில் எரியும் ஜ்வாலை - செவ்வாய் என்பார்கள். இந்த ஜ்வாலையின் நிழல் கீழே விழும் அல்லவா... அதை ராகு என்கிறார்கள். ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம்... அதுதான் குரு அம்சம்!
ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கருமைப் படிந்த பகுதியை சனி பகவானுக்கு நிகராகச் சொல்கின்றனர். வெளிச்சம் பரவுகிறது அல்லவா. இதையே ஞானம் என்கிறார்கள். இது கேதுவுக்கு நிகர் என்று போற்றுகின்றனர்.
திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது சுக்கிரன் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஆசை என்று விளக்குகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் நிம்மதி கிடைப்பது உறுதி என்று அர்த்தம்!
ஆசைகள் நம்மை அழிக்கிறது. மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மாவானது, மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது நம்மை! அகல் தீபம் உணர்த்தும் தத்துவம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!