

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முதல் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள பெரியமாரியம்மன் கோயிலில் தென்னை ஓலை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
இதே போல் நேதாஜி சாலையில் சமயபுரத்து மாரியம்மன் கோயில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில், ஜோதி விநாயகர் தெரு முத்து மாரியம்மன் கோயில், ஜக்கப்பன் நகர் ராஜகாளியம்மன் கோயில், அக்ரஹாரம் அம்பா பவானி அம்மன் கோயில், ராயக்கோட்டை மேம்பாலம் பெரிய மாரியம்மன் கோயில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீயோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
21-ம் ஆண்டு திருவிழா: பர்கூர் ஸ்ரீ அரசு மரத்து மகா மாரியம்மன் கோயில் 21-ம் ஆண்டு திருவிழா நடந்தது விழாவின் முக்கிய நாளான நேற்று பர்கூர் பாரத கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.