

திருவண்ணாமலை: சு.பொலக்குணம் கிராமத்தில் ஆடிமாத திருவிழாவில் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தரின் மார்பில் உரல் வைத்து மாவு இடித்து வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மனின் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தர் முருகனின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது. உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை பக்தர்கள் சாப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து, கோயிலில் அம்மனின் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.