

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் இந்த விழா விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். நிகழாண்டு 14-ம் தேதி கோயிலிலுள்ள ஞானவாவி குளத்தில், திருஞானசம்பந்தருக்கு, சுவாமி-அம்பாள் காட்சி அளித்து ஒருமுலைப்பால் வழங்கியும், இரவு திருஞானசம்பந்தருக்கு பொற்றளம் அளித்து, அதனுடன் வீதியுலாவும், 15-ம் தேதி திருஞானசம்பந்தருக்கு, இறைவன் வழங்கிய, முத்துக் கொண்டை, முத்துக் குடை, முத்து சின்னங்களுடன் வீதியுலாவும், இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட முத்து திருவோடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலா நடைபெற்றது.
பிரதான நிகழ்ச்சியான காலை முத்துப்பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. பல்லக்கில், திருஞானசம்பந்தர் பக்தர்களுக்குக் காட்சியளித்து, தொடர்ந்து திருமேற்றளிகை கைலாசநாதர் கோயிலுக்கும், திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோயிலுக்கும், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும் வீதியுலாவாக சென்று, அங்குச் சுவாமியை தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் முத்து விமானத்தில் காட்சியளிப்பதும், இவர்களை திருஞானசம்பந்தர் எதிர்வணங்கி, முத்துப்பந்தல் நிழலில் வீதியுலா வலம் வருதல் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ம.ஆறுமுகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.