Published : 26 Oct 2017 10:54 AM
Last Updated : 26 Oct 2017 10:54 AM

வார ராசிபலன் 26/10/2017 முதல் 01/11/2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் அஷ்டமத்து சனி நடந்தாலும் ராசிநாதன் செவ்வாயுடன் சேர்த்து நான்கு கிரகங்கள் உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். சுப நிகழ்ச்சிகளுக்கு இருந்துவந்த தடைகள் அகலும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை குறையும். உங்களைப் பற்றி யாராவது அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கவும். பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். கலைத்துறையினர் நிதானமாகச் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு சாதகமான பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: செவ்வாய் கிழமை முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுடைய உலக அறிவு உங்களுக்குக் கைகொடுக்கும். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உதவி புரியாவிட்டாலும் ராசிநாதனுடைய சஞ்சாரத்தின் மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். திருமண முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். அலுவலகம் தொடர்பான பணிகள் வேகப்படும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியாகச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். 

நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களின் முயற்சிகள் பலன் தரும். கலைத்துறையினர் கேளிக்கைகளில் பங்கேற்க நேரிடும். அரசியல்வாதிகளுக்கு இருந்துவந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 6, 9

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். உங்கள் விடாமுயற்சி  வெற்றியைக் கொடுக்கும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் உண்டாகும். விட்டுச்சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். சுபச்செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்துக்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். தொழில் ஸ்தானத்தை செவ்வாய், சுக்கிரன் பார்க்கிறார்கள். அதனால் போட்டிகள் நீங்கும். கடன் விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கியப் பிரமுகர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 5, 9

பரிகாரம்: பெருமாளை துளசியால்  அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரம் அனுகூலம் தரும் தரும் வகையில் இருக்கிறது. எடுத்த காரியத்தைத் திறமையாக செய்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தித் தெளிவு உண்டாகும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும்.

முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மேலிடம் அனுசரணையாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தலை தூக்கலாம். சாதுரியமாகப் பேசிச் சமாளிப்பது  நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மனவலிமை உண்டாகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கிப் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 2, 6

பரிகாரம்: திங்கள்கிழமை அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மனக்கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் கடும் முயற்சிக்குப் பிறகு நல்ல பலன்கள் உண்டாகும். இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் உற்சாகத்தைத் தரும். ராசியை சனி பார்ப்பதால் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் தேக்க நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தைச் சாதிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். பெண்களுக்கு மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கலைத்துறையினர் விடாமுயற்சியைக் கைவிடவேண்டாம். பணவரத்து திருப்திதரும். அரசியல்வாதிகளுக்குப் புத்தித்தெளிவு ஏற்படும். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாகப் படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சினை குறையும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய், சுக்கிரன் இருக்கிறார்கள். காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் விரிவாக்க முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளைத் திறம்படச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் திறமையால் பணியைச் சிறப்பாகச் செய்வார்கள்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெண்களின் எண்ணப்படி காரியங்களைச் செய்து முடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராதத் திருப்பங்களை ஏற்படுத்தும். மனத்தில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்குப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டுச் செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5 பரிகாரம்: புதன்கிழமை நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x