திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று திரண்ட  பக்தர்கள். படம்: என்.ராஜேஷ்
திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று திரண்ட பக்தர்கள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில்புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, திருச்செந்தூரில் வசந்த விழாவாக கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான நேற்று வைகாசிவிசாகத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை ஒருமணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்குமூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது.

பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் கிரிவீதி வலம் வந்தார். அத்துடன் திருவிழா நிறைவடைந்தது.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in